இந்தியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வந்தது.
டி காக் அதிரடி
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டி காக் அதிரடியாக ஆடி வந்தார். முதல் ஓவரை வாஷிங்க்டன் சுந்தர், இரண்டாம் ஓவரை தீபக் சாஹர் வீசிய நிலையில், மூன்றாவது ஓவரை வீச நவ்தீப் சைனியை அழைத்தார் கேப்டன் கோலி.
வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்
நவ்தீப் சைனி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தான் அறிமுகம் ஆனார். தன் அறிமுகப் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து பிரபலம் ஆனார். அந்த தொடரில் 3 போட்டிகளில் 5 விக்கெட் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஹாட்ரிக் ஃபோர்
அதே நவ்தீப் சைனியின் முதல் மூன்று பந்துகளை ஃபோருக்கு அனுப்பி அதிர வைத்தார் டி காக். அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா. நவ்தீப் சைனிக்கு மீண்டும் ஓவர் கொடுக்கவில்லை கேப்டன் கோலி.
டி காக் விக்கெட்
பின்னர், டி காக் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில், மீண்டும் நவ்தீப் சைனியை அழைத்தார் கோலி. இந்த முறை டி காக், சைனி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் எடுத்து இருந்தாலும், சைனியின் பந்துவீச்சு மோசமாகவே அமைந்தது.
மோசமான பந்துவீச்சு
4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார் சைனி. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக ரன்கள் வாரி இறைத்தது சைனி தான். அந்த அளவு அவர் மோசமாக காட்சி அளிக்க முக்கிய காரணம் டி காக் தான்.