இந்தியா வெற்றி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 502 ரன்கள் குவித்தது, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 431 ரன்கள் எடுத்தது இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸில் விரைவாக ஆடி 323 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து, 395 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா 191 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோஹித் அசத்தல்
இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து, துவக்க வீரராக தன் முதல் டெஸ்டில் முத்திரை பதித்தார் ஹிட்மேன் ரோஹித் சர்மா. 13 சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார். பல்வேறு சாதனைகளையும் முறியடித்தார்.
மற்ற வீரர்கள் செயல்பாடு
அஸ்வின் 8 விக்கெட்களும், ஷமி 5 விக்கெட்களும் வீழ்த்தினர். மயங்க் அகர்வால் முதல் இன்னிங்க்ஸில் தன் முதல் டெஸ்ட் சதம் அடித்தார். அவர் இரட்டை சதமும் அடித்து அசத்தினார்.
ஜடேஜா 6 விக்கெட்கள்
ஜடேஜா முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களும் எடுத்தார். அத்தோடு இரண்டாம் இன்னிங்க்ஸில் விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற நிலையில் 3 சிக்ஸர் உட்பட 32 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். சிறப்பான கேட்ச் ஒன்றையும் பிடித்து இருந்தார்.
சேவாக் பாராட்டு
இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டார் முன்னாள் துவக்க வீரர் வீரேந்தர் சேவாக். தன் பதிவில் ரோஹித்தை தனியாக பாராட்டி விட்டு, சிறப்பாக செயல்பட்ட மற்ற வீரர்களையும் குறிப்பிட்டார்.
|
சேவாக் பதிவு
அவர் பதிவில், "ரோஹித்துக்கு சிறப்பான டெஸ்ட் மேட்ச். டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக அவருக்கு கனவு ஆரம்பம். அது இந்தியாவுக்கு நல்ல வெற்றி. மயங்க் அகர்வால், ஷமி, அஸ்வின், புஜாரா ஆகியோர் சிறப்பாக பங்களித்தார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஜடேஜா பெயர் எங்கே?
சேவாக் போட்ட ட்விட்டர் பதிவில் ஜடேஜா பெயரை காணவில்லை. அவர் ஜடேஜாவை மறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், ரசிகர்கள் தொடர்ந்து ஜடேஜா பெயரை மறந்து விட்டீர்களா? என கேட்டு வந்தனர்.
|
ஜடேஜா ரீட்வீட்
அதில் நச்சென இருந்த ரசிகரின் பதிவு ஒன்றை தன் ட்விட்டரில் பக்கத்தில் ரீட்வீட் செய்து இருக்கிறார் ஜடேஜா. அந்த பதிவில், "சேவாக் டிவியில் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை பார்க்கவில்லையா?" என சற்று கோபமாக கேட்டு இருந்தார். ஜடேஜா தானாக எதுவும் கூறவில்லை.
ரசிகர்கள் அதிர்ச்சி
ரசிகர்கள் கேட்டதே போதும் என அமைதியாக இல்லாமல், ஜடேஜா அந்த பதிவை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். சில ரசிகர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாதாரண விஷயத்துக்கு ஏன் ஜடேஜா எதிர்வினை ஆற்றுகிறார்? போட்டிகளில் கவனம் செலுத்தலாமே என கூறி வருகின்றனர்.
அந்த சம்பவம்
ஜடேஜா இதற்கு முன்பும் தன்னை சாதாரண வீரர் என்று கூறிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை ட்விட்டரில் பிரித்து மேய்ந்து இருந்தார். அதனால், ஜடேஜா தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், சேவாக் பதிவுக்கும் அவர் பதிலடி கொடுத்து இருப்பது சர்ச்சையாக மாறி உள்ளது.