இந்தியா சேஸிங்
இரண்டாவது டி20யில் இந்திய அணி முதலில் பந்துவீசியது. தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 149 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி 94 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து இருந்தது.
சொதப்பல் ஷாட்
அப்போது பேட்டிங் செய்ய வந்தார் ரிஷப் பண்ட். இளம் வீரருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு, அணியை வெற்றி பெற வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், வழக்கம் போல தவறான ஷாட் ஆடி 4 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார் பண்ட்.
கடும் விமர்சனம்
இதனால், கடும் விமர்சனம் எழுந்தது. ஏற்கனவே மோசமான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு இந்த தென்னாப்பிரிக்கா தொடர் தான் கடைசி வாய்ப்பு என கூறப்பட்டு வரும் நிலையிலும், ரவி சாஸ்திரி பேட்டியில் அவரை காய்ச்சி எடுத்து இருந்தும் சொதப்பி இருக்கிறார்.
வெ.இண்டீஸ்-இல் சொதப்பல்
முன்னதாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் ஒரே மாதிரி தவறான ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வந்தார் ரிஷப் பண்ட். அப்போதே அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
மோசமான பார்ம்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 10 இன்னிங்க்ஸில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போதே அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. எனினும், தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.
ரவி சாஸ்திரி கடும் தாக்குதல்
தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் பேட்டி அளித்த ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட்டமிழந்த விதம் மோசமாக இருந்தது. அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் தான் கொடுக்கப்படும். திறமை இருந்தாலும், அணியை கை விடக் கூடாது என அவரை விளாசி இருந்தார்.
கோலி முடிவு
விராட் கோலியும் இளம் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க மூன்று முதல் ஐந்து போட்டிகள் தான் வழங்கப்படும். ரிஷப் பண்ட் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு விளையாட வேண்டும் என கூறி இருந்தார்.
திட்டு விழுந்தது
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் ரிஷப் பண்ட்டை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக திட்டி இருப்பார் என்றும் கூறப்பட்டது. பேட்டியில் கூட, "முட்டியில் தட்டுவோம்" என சூசகமாக அதை கூறி இருந்தார்.
இந்த தொடர் தான்..
இந்த நிலையில், தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பான இந்த தொடரில் ஒரு போட்டியில் சொதப்பி இருக்கிறார் பண்ட். அவர் வேறு முறையில் ஆட்டமிழந்து இருந்தாலும் கூட தப்பிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அதே தவறான ஷாட் மூலம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அணியில் இருந்து நீக்கம்?
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இன்னும் ஒரே ஒரு போட்டி தான் மீதம் உள்ளது. அந்தப் போட்டியில் பண்ட் ஏதேனும் அற்புதம் நிகழ்த்தி அரைசதம், சதம் அடித்தால் தான் அணியில் நீடிக்க முடியும். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.