நான்காம் வரிசை சிக்கல்
இந்திய அணியில் நீண்ட காலமாக நான்காம் வரிசையில் யார் பேட்டிங் செய்வது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அந்த இடத்துக்கு யாரும் சரியாக பொருந்தாத நிலையில் அது உலகக்கோப்பை தொடரிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இரு வீரர்கள்
அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். அது அந்த சிக்கலுக்கு விடை அளித்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் கலக்கல்
ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்தார். அதன் மூலம், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஆக நிரந்தர இடத்தை பிடிப்பார் என கருதப்பட்டது.
ரிஷப் பண்ட் பார்ம்
மறுபுறம், ரிஷப் பண்ட் உலகக்கோப்பை முதல், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை மோசமான் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து வந்தார். மிகக் குறைவான ரன்களே எடுத்து இருந்தார். தென்னாப்பிரிக்கா தொடர் தான் அவருக்கு கடைசி என கருதப்பட்டது.
இரண்டாம் டி20
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இரண்டாம் டி20யில் ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்கினார் கேப்டன் கோலி. வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து, எப்போதும் போல தவறான ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பண்ட்.
அதிரடி வீரர்
ரிஷப் பண்ட் அதிரடி வீரர் எனும் நிலையில் அவருக்கு நான்காம் வரிசை சரியான பேட்டிங் வரிசையாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் களமிறங்கி சொதப்பினார்.
மூன்றாம் டி20 பேட்டிங் வரிசை
எனவே, மூன்றாவது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை நான்காம் வரிசையில் களமிறக்க வேண்டும். அது தான் சரியான முடிவாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர். என்ன செய்யப் போகிறார் கோலி?