தோனிக்கு மாற்று வீரர்
இந்திய டெஸ்ட் அணியில் விரிதிமான் சாஹா காயமடைந்து இருந்த போது நுழைந்த ரிஷப் பண்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனிக்கு மாற்றாக இடம் பெற்றுள்ளார். தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் நிலையில், பண்ட் அணியில் முக்கியத்துவம் பெற்றார்.
உலகக்கோப்பை
ஆனால், எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பண்ட் செயல்படவில்லை. உலகக்கோப்பை தொடரில் இடையே நுழைந்த அவர், பெரிய அளவில் ரன் எடுக்காவிட்டாலும், அணிக்கு ஓரளவு உதவினார். எனினும், தவறான ஷாட் ஆடி ஆட்டமிழப்பது தொடர்கதையாக இருந்தது.
வெ.இண்டீஸ் தொடர் சொதப்பல்
உலகக்கோப்பைக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சொதப்பினார் ரிஷப் பண்ட். ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் 65 ரன்கள் எடுத்த அவர், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்றிலும் சேர்த்து 10 இன்னிங்க்ஸ்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ரசிகர்கள் ஆதரவு
உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டை ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் பெரிய அளவில் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக விஜய் ஷங்கரை நீக்கி விட்டு, ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்கள்.
அதிகரிக்கும் விமர்சனம்
அதே போல, ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்போது பண்ட் ரன் குவிக்காத நிலையில், அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
சஞ்சு சாம்சன் அதிரடி
மற்றொரு புறம், ஐபிஎல் தொடரில் கலக்கிய சஞ்சு சாம்சன் சமீபத்தில் நடந்த இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ போட்டியில் 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கோலிக்கு தலைவலி
இதனால், கேப்டன் கோலிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. பலரும் பேட்டிங்கில் ரன் குவித்து நிரூபித்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கருத்து கூறி வருவதால், ரிஷப் பண்ட்டுக்கு கெடு விதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் அவர்.
2020 டி20 உலகக்கோப்பை திட்டம்
அது மட்டுமின்றி, 2020 டி20 உலகக்கோப்பைக்குள் இந்திய அணியை தயார் செய்ய வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆக்காமல், குறைந்த காலத்தில் வீரர்களை அடையாளம் காண வேண்டிய நிலையும் உள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடர்
அதனால், ரிஷப் பண்ட்டுக்கு தென்னாப்பிரிக்கா தொடர் இறுதி வாய்ப்பாக மாறி இருக்கிறது என்பதே உண்மை. தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
டி20யில் ரன் வேண்டும்
இதில் ரிஷப் பண்ட் டி20 தொடரில் ரன் குவித்தே ஆக வேண்டும். காரணம், டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பெரிய அழுத்தம் இல்லை. 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள பண்ட் 2 சதம் அடித்து பேட்டிங் சராசரி 44 வைத்துள்ளார். எனவே, டி20 போட்டிகளில் ரன் குவித்தால் தான் கேப்டனிடம் பண்ட் தப்பிக்க முடியும்.