தென்னாப்பிரிக்கா தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டி20 தொடருக்கான அணி முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ராகுல் நீக்கம்
அந்த அணியில் துவக்க வீரர் ராகுல் நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற அதே அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற்றது.
ரோஹித் வாய்ப்பு
ராகுல் நீக்கத்தால், ரோஹித் சர்மாவுக்கு அணியில் துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. தேர்வுக் குழு தலைவர் பிரசாத் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு முன் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளது.
போட்டி விவரம்
மூன்று நாட்கள் போட்டியாக விஜயநகரத்தில் செப்டம்பர் 26 அன்று நடைபெற உள்ளது அந்தப் போட்டி. அந்த போட்டிக்கான அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ. அட.. ரோஹித் சர்மா கேப்டனா?
துணை கேப்டனாக ரோஹித்?
கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒருநாள் போட்டிகள் அணி மற்றும் டி20 அணியை அடுத்து, டெஸ்ட் போட்டி அணிக்கும் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவாரோ என்று கூட ஒரு எண்ணம் வந்தது.
உள்ளடி
ஆனால், உற்றுப் பார்த்தால் தான் சில உள்ளடி என்ன என்று தெரிகிறது. அந்த அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த மூத்த வீரர் டெஸ்ட் அணியில் இடம் இல்லாமல் தவிக்கும் உமேஷ் யாதவ் மட்டுமே.
மற்ற வீரர்கள் யார்?
மற்ற வீரர்களில் அறிமுகமான முகம் டெஸ்ட் அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால். மற்றவர்கள் அனைவரும் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்காதவர்கள் அல்லது அணியில் வாய்ப்பை இழந்தவர்கள் மட்டுமே.
வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாமே?
இப்படி ஒரு அணிக்கு தான் ரோஹித் சர்மா கேப்டன். அது சரி, ஏன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இப்படி அறிமுகம் இல்லாத வீரர்களை ஆட வைக்கிறது பிசிசிஐ? டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள இந்திய வீரர்களை இந்தப் போட்டியில் ஆட வைத்து பயிற்சி அளிக்கலாமே?
அது ராஜதந்திரம்
அங்கே தான் ஒரு எல்லா அணிகளும் செயல்படுத்தும் ஒரு ராஜதந்திரம் உள்ளது. எந்த நாட்டிற்கு ஒரு அணி சுற்றுப்பயணம் செய்தாலும், அந்த அணி ஆடும் பயிற்சிப் போட்டியில் புதுமுக வீரர்கள், உள்ளூர் வீரர்களை ஆட வைத்து. முக்கிய அணி வீரர்களை அவர்களிடம் இருந்து தள்ளி வைப்பது வழக்கமாக உள்ளது.
காரணம் என்ன?
அதற்கு காரணம், நம் அணி வீரர்களின் பலம், பலவீனத்தை எதிரணி தெரிந்து கொள்ளக் கூடாது என்பது தான். அப்படி ஒரு அணிக்கு தான் ரோஹித் சர்மா கேப்டன். அப்புறம் ஏன் ரோஹித் ரசிகர்களுக்கு கோபம் வராது.
போர்டு ப்ரெசிடென்ட் லெவன் வீரர்கள்
போர்டு ப்ரெசிடென்ட் லெவன் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), மாயங்க் அகர்வால், ப்ரியங்க் பாஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஜலஜ் சக்சேனா, தர்மேந்திர சிங் ஜடேஜா, ஆவேஷ் கான், இஷான் போரேல், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ்.