தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டாலும், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் போல வெளியே அமர வைக்கப்படுவாரா? என்ற கேள்வி உள்ளது.
முன்னாள் வீரர்கள் கருத்து
ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டர் வீரராக கருதாமல், துவக்க வீரராக அணியில் ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முன்னாள் வீரர்கள் கங்குலி, கம்பீர், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இதை பேட்டிகளில் கூறி உள்ளனர்.
துவக்க வீரர் ராகுல் சரியில்லை
அதற்கு முக்கிய காரணம், துவக்க வீரர் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன் குவிக்கவில்லை என்பது தான். அவர் தான் ஆடிய கடைசி 30 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 664 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
மாயங்க் அகர்வால் உறுதி
மற்றொரு துவக்க வீரர் மாயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், நான்காவது இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்து தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார்.
ரோஹித் சர்மா துவக்க வீரர்
எனவே, ராகுலை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை அணியில் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே சமயம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய சில வீரர்களின் பெயர்களும் தேர்வுக் குழுவின் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இளம் வீரர்கள்
அந்த இளம் வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பாஞ்சால் மற்றும் ஷுப்மன் கில். இவர்களில் பெங்கால் அணிக்காக ஆடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் பெயர் முன்னிலையில் உள்ளது. அவரை உத்தேச அணியில் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பயிற்சிப் போட்டி
ஒருவேளை இந்திய உத்தேச டெஸ்ட் அணியில் 14 வீரர்களுக்கு பதில், 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதில் அபிமன்யு ஈஸ்வரன் பெயர் நிச்சயம் இடம் பெறும். அப்போது ரோஹித் சர்மா நேரடியாக துவக்க வீரராக அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
ரோஹித் சர்மா நிலை
என்ன சிக்கல்? தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் ஒரு பயிற்சிப் போட்டி நடைபெற உள்ளது. அதில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பங்கேற்பார்கள். அதில் ரோஹித் சிறப்பாக ஆடினால், துவக்க வீரராக டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெறுவார்.
கேள்வி எழுந்துள்ளது
அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக ஆடி, ரோஹித் சர்மா சரியாக ஆடாவிட்டால், ரோஹித்தை தேர்வு செய்ய மாட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜாம்பவான் என்ற அந்தஸ்தில் பார்க்கப்படும் ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் இப்படி ஒரு நிலைமையா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
டெஸ்ட் அணி அறிவிப்பு
இன்று அறிவிக்கப்பட உள்ள டெஸ்ட் அணியில் அபிமன்யு ஈஸ்வரன் வாய்ப்பு பெறுவாரா? என்பதை பொறுத்தே ரோஹித் சர்மா துவக்க வீரராக வாய்ப்பு பெறுவாரா? இல்லையா? என்பதை கூற முடியும்.