ஒருநாள் தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரு ஒருநாள் போட்டிகள் மார்ச் 15 மற்றும் 18இல் நடைபெற உள்ளது.
கொரோனா தாக்குதல்
சில நாட்களாக கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. முதலில் 28 நபர்களுக்கு இருந்த வைரஸ் தாக்குதல், அடுத்த சில நாட்களில் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலியாக 76 வயது முதியவர் மரணம் அடைந்தார்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய அரசு மக்கள் பொது வெளியில் கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. மேலும், விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும், அப்படி நடத்தியே ஆக வேண்டும் என்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட அரங்கில் நடத்துமாறு கூறி உள்ளது.
கிரிக்கெட்டுக்கு பாதிப்பு
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பிசிசிஐ இந்த தொடரை நடத்துவதில் உறுதியாக உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் ரசிகர்கள் கூட்டத்தோடு தான் நடக்க இருந்தது. எனினும், மழை காரணமாக அந்தப் போட்டி நடைபெறவில்லை. அந்தப் போட்டியைக் காண வழக்கத்தை விட மிக, மிக குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ போட்டி
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற இருந்தது. அந்த மாநிலத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த மாநில அரசு சார்பில் பிசிசிஐக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோரிக்கை
லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் பிசிசிஐக்கு எழுதி உள்ள கடிதத்தில் போட்டியை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அதை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. லக்னோ ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.
பார்வையாளர்கள் இல்லாமல்..
எனினும், பார்வையாளர்கள் இல்லாமல் இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியும் இதே போலவே நடைபெறும் என தெரிகிறது. உத்தர பிரதேச அரசின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளவில்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மாநில அரசுகள் எதிர்ப்பு
ஏற்கனவே, ஐபிஎல் தொடருக்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் எதிர்ப்பு கூறி உள்ளன. அந்த தொடரை தள்ளி வைக்க வேண்டும், இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என அந்த மாநிலங்கள் கூறி வருகின்றன.
வழக்குகள்
இந்த நிலையில் தான் உத்தர பிரதேச அரசின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இது போல பிசிசிஐ தொடர்ந்து நடந்து கொள்ள முடியாது. ஐபிஎல் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.