இரண்டாம் டெஸ்ட்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் அபாரமாக ரன் குவித்தது. மயங்க் அகர்வால் 108, புஜாரா 58, ரஹானே 59, ஜடேஜா 91 ரன்கள் குவித்தனர்.
கோலி இரட்டை சதம்
விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 254 ரன்கள் குவித்தார். அவர் இரட்டை சதம் அடித்த பின் இந்தியா 500 ரன்களை நெருங்கியது. அப்போதே இந்தியா டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா நிலை
இரண்டாம் நாள் இறுதியில் குறைந்தது 15 ஓவர்களாவது தென்னாப்பிரிக்க அணிக்கு பந்து வீசி விக்கெட் எடுப்பது தான் இந்திய அணியின் திட்டமாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீரர்கள் சோர்வில் இருப்பதை பயன்படுத்தவே இந்த திட்டம்.
முத்துசாமி பந்தில் அவுட்
இந்த நிலையில், 26 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், கோலி இரட்டை சதம் அடித்து ஆடி வந்தார். இந்தியா 496 ரன்களை எட்டி இருந்தது. அப்போது முத்துசாமி வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. டு ப்ளேசிஸ் கேட்ச் பிடித்தார்.
வாழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர்
கோலி அவுட் என்பதை அறிந்து, திருப்புமுனை கிடைத்தது என தென்னாப்பிரிக்க அணி உற்சாகம் அடைந்தது. தென்னாப்பிரிக்க வீரர் மார்கிரம் இரட்டை சதம் அடித்த கோலியை வாழ்த்தினார். கோலி பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட துவங்கினார்.
அவுட் இல்லை
எனினும், இந்தப் போட்டியில் ரபாடா, முத்துசாமி இருவரும் அதிக நோ பால் வீசியதால், அம்பயர் முத்துசாமி வீசிய பந்து நோ பாலா என பார்க்க முடிவு செய்தார். ரீப்ளேவில் நோ பால் என தெரிந்ததை அடுத்து கோலி பாதியில் திரும்பினார்.
நையாண்டி சிரிப்பு
தான் அவுட் ஆனதாக நினைத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் கொண்டாடியதையும், தனக்கு வாழ்த்து சொன்னதையும் நினைத்தோ, என்னவோ கோலி ஒரு நையாண்டி சிரிப்பு சிரித்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.
99 ரன்கள் சேர்த்த இந்தியா
அதன் பின் கோலி - ஜடேஜா ஜோடி டி20 போட்டி போல வெறியாட்டம் ஆடியது. ஒரு ஓவரில் 21 ரன்கள் எடுத்து மிரட்டினர். அடுத்த 10 ஓவர்களில் கோலி - ஜடேஜா ஜோடி 99 ரன்கள் சேர்த்தது.
50 ரன்கள் அதிகம்
ஜடேஜா 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் இந்தியா முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. இந்தியா 601 ரன் எடுத்து 5 விக்கெட்கள் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. ஒருவேளை கோலி அப்போதே அவுட் ஆகி இருந்தால் இந்தியா அடுத்த 10 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து இருக்கலாம் அல்லது அப்போதே டிக்ளர் செய்தும் இருக்கலாம்.
மனதளவில் சோர்ந்த தென்னாப்பிரிக்கா
அந்த நோ பால் சம்பவத்துக்குப் பின் தென்னாப்பிரிக்க வீரர்கள் சோர்ந்து போனார்கள். அந்த நேரத்தில் கோலி - ஜடேஜா வெளுத்துக் கட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதை போலத் தான் இருந்தது அவர்களின் செயல்பாடுகள். தென்னாப்பிரிக்க தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது.