தென்னாப்பிரிக்க சீரிஸ்
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோகித், விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. கே.எல்.ராகுல் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட படையை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. இதில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக், ருதுராஜ் கெயிக்வாட் உள்ளிட்ட பல இளைஞர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
சீனியர்களின் வருகை
இவர்களுக்கு உறுதுணையாக சீனியர்கள் வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஷிகர் தவான், மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இளம் வீரர்களுக்காக அவர்களை புறக்கணித்ததாக கூறப்பட்டது.
பிசிசிஐ வைத்த ஆப்பு
இந்நிலையில் தேர்வான 18 வீரர்களுக்கும் புதிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் முடிந்தவுடன் அனைத்து வீரர்களும் பிசிசிஐ-ன் ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்வாக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாதவர்கள் பாரபட்சம் பார்க்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஐபிஎல்-ல் பலரும் காயத்தால் பாதிக்கப்பட்டதால் முழு உடற்தகுதியையும் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 கெடு
இதற்காக அனைத்து வீரர்களும் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் பெங்களூரு செல்ல வேண்டும். அங்கு வி.வி.எஸ் லக்ஷ்மண் தலைமையில் தேர்வு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும். அதன்பின்னர் தான் ஜூன் 7ம் தேதி டெல்லிக்கு அனுப்பப்படுவார்கள். ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட சிலருக்கு காயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய படை
கே.எல்.ராகுல், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்