துவக்க வீரர் மாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால் - ராகுல் சொதப்பலாக ஆடினர். மாயங்க் ஒரு அரைசதம் அடித்து தன்னை காத்துக் கொண்டார். அதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க வீரர்களில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராகுல் சரியில்லை
துவக்க வீரர் ராகுல் மோசமாக ஆடி வந்த நிலையில், அவரை அணியில் இருந்து நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்க திட்டம் வகுத்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.
ஷுப்மன் கில் தேர்வு
இந்த நிலையில், மாற்று துவக்க வீரராக உத்தேச அணியில் இடம் பிடித்தார் ஷுப்மன் கில். உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ போட்டிகளிலும் சிறப்பாக ஆடி அதிரடி இரட்டை சதம் (248 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார்) அடித்த ஷுப்மன் கில், இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.
போட்டியில் ஆடுவாரா?
உத்தேச அணியில் இடம் பெற்ற கில், போட்டிகளில் களமிறங்கி ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாற்று வீரர் என்றாலே வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது தான் நிலை. களத்தில் ஆடும் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வாட்டர் பாய் வேலை தான் பார்க்க வேண்டும்.
எங்கேயும் ஆடுவார்
ஆனால், ஷுப்மன் கில்லை அதற்கு தேர்வு செய்யவில்லை. அவர் மாற்று துவக்க வீரர் என்பதோடு, மிடில் ஆர்டர் வீரர்களுக்கும் மாற்றாக இருப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்தியா ஏ அணியிலும் அவர் இரண்டு இடத்திலும் ஆடி இருக்கிறார்.
கேப்டனின் திட்டம்
இதை மனதில் வைத்து திட்டமிட்டு தான் கேப்டன் கோலி ஷுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள். குறிப்பாக எந்த இடத்தில் பேட்டிங் ஆடினாலும் ரன் குவிக்கும் வீரர் என்ற காரணத்தால் தான் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
மூன்று டெஸ்ட் போட்டிகள்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. தொடரின் முதல் போட்டியில் ஷுப்மன் கில் வாய்ப்பு பெற மாட்டார். ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
வாய்ப்பு உள்ளது
எனினும், தொடரின் இடையே எந்த வீரராவது காயம் அடைந்தாலோ, பார்ம் அவுட் ஆனது போல வரிசையாக பேட்டிங்கில் சொதப்பினாலோ, எந்த பேட்டிங் வரிசையிலும் ஆடக் கூடிய ஷுப்மன் கில் அணியில் இடம் பெறுவார்.
நிச்சயம் ஆடுவார்
அதனால், கில் வெறும் வாட்டர் பாய் வேலைக்கு மட்டும் எடுக்கப்படவில்லை. அவர் அடித்த இரட்டை சதத்தை மனதில் வைத்து தான் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் நிச்சயம் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலாவது அணியில் இடம் பெறுவார்.