முதல் பயிற்சி முகாம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், சிராஜ், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக் என இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கவனம் ஈர்த்த உம்ரான் மாலிக்
இந்திய அணியின் முதல் பயிற்சி முகாம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. வீரர்கள் அனைவரும் பழைய உற்சாகத்துடன் வலைப்பயிற்சிக்கு சென்றனர். அப்போது உம்ரான் மாலிக்கிடம் மட்டும் ராகுல் டிராவிட் அதிக நேரம் செலவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதுவும் உம்ரான் பயிற்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே ராகுல் டிராவிட் அவரிடம் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதுவும் பிட்ச்-ஐ காண்பித்து பேசியதால், உம்ரான் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இருப்பார் எனத் தெரிகிறது.
டிராவிட்டின் திட்டம்
உம்ரான் மாலிக்கை இந்திய அணியின் டெஸ்ட் பொக்கிஷமாக மாற்ற டிராவிட் முயன்று வருகிறார். அதற்காக உம்ரான் மாலிக்கிடம் " உன்னால் எவ்வளவு வேகமாக வீசமுடியுமோ அதை செய்" என்ற மந்திரம் மட்டுமே கூறப்பட்டுள்ளதாம். இதுபோன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரை சரியாக செதுக்கினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலமாக மாறுவார் என தேர்வுக்குழு மற்றும் டிராவிட் முடிவெடுத்துள்ளனராம்.
தயாராகும் அறிக்கை
இதற்காக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கோச் பராஸ் மாம்ரே, மாலிக்கிற்கு ஸ்பெஷல் வகுப்புகளை எடுத்து வருகிறார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட்கள், உம்ரான் மாலிக்கின் ஃபிட்னஸ், அவர் எந்த அளவிற்கு பணிச்சுமைகளை தாங்குவார் என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.