பும்ரா இல்லை
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார், அதனால், மாற்று வேகப் பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் அணியில் இடம் பெற்றார்
மாற்று வீரருக்கு வாய்ப்பு
முதல் டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், இரண்டாம் டெஸ்டில் எப்படி செயல்படும் என தெரியாத பிட்ச் காரணமாக கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார் உமேஷ் யாதவ்,
ஆடுகளம் எப்படி?
புனே ஆடுகளம் முதல் நாள் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கும் என கருதப்படுகிறது. அதன் பின் அந்த ஆடுகளம் மந்தமாக மாறி விடும். கடைசி இரு நாட்களில் பந்துவீசுவது கடினம் தான் என கூறப்படுகிறது.
சுழற் பந்துவீச்சு எடுபடுமா?
முக்கியமாக புனேவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுழற் பந்துவீச்சுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என தெரியாத நிலையே உள்ளது. காய்ந்த ஆடுகளமாக இருந்தால், சுழற் பந்துவீச்சு அபாரமாக இருக்கும்.
கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்
ஆனால், தற்போது மழை பெய்து வருவதால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது. கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் தேவை என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்திய அணி.
உள்ளே வந்த உமேஷ் யாதவ்
அதனால், மாற்று வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் உமேஷ் யாதவ்வை அணியில் சேர்த்துள்ளார் கேப்டன் கோலி. சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஹனுமா விஹாரி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காரணம் இது தான்
உமேஷ் யாதவ்வை அணியில் சேர்க்க மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அது ரிவர்ஸ் ஸ்விங். உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் சிறப்பாக செயல்படுவார் என்பதே முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணியை மாற்ற காரணம். .
கடைசி இரு நாட்கள்
பந்து பழையதாக மாறிய பின்பு தான் ரிவர்ஸ் ஸ்விங் வீச முடியும். முதல் டெஸ்டில் ஐந்தாம் நாள் ஷமி அபாரமாக செயல்பட்டு ரிவர்ஸ் ஸ்விங் வீசி 5 விக்கெட் எடுத்தார். அதே போல, இரண்டாம் டெஸ்டில் கடைசி இரு நாட்களில் ஷமி, உமேஷ் யாதவ் இணைந்து ரிவர்ஸ் ஸ்விங் வீசினால் தென்னாப்பிரிக்கா நிலை குலைந்து போய் விடும் என்பதே கோலியின் அதிரடி திட்டம்.
இந்தியா டாஸ் வென்றது
இரண்டாம் டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதுவே இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. முதல் டெஸ்ட் போலவே, தென்னாப்பிரிக்கா சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்
முதல் போட்டியில் இரு அணிகளிலும் மூன்று சசுழற் பந்துவீச்சாளர்கள் ஆடிய நிலையில், இரண்டாம் டெஸ்டில் இரண்டு அணிகளிலும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் ஆடி வருகின்றனர்.