வியூகம் அமைத்த இந்தியா
இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று இருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரே மாதிரியான வியூகம் அமைத்து தான் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இருந்தது.
என்ன வியூகம்?
இரண்டு போட்டிகளிலுமே இந்தியா முதலில் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய பின் இரண்டாம் நாள் இறுதியில் சில ஓவர்கள் இருக்கும் போது தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட அழைத்து, இரண்டு நாட்கள் பீல்டிங் செய்து சோர்ந்து போயிருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்களின் 2 - 3 விக்கெட்டை இரண்டாம் நாள் முடிவுக்குள் எடுத்தது இந்தியா.
வெற்றிக்கு திட்டம்
தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் திட்டங்களில் வீழ்ந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அணியை மாற்றி அமைத்து, இந்திய வியூகங்களை உடைக்கவும் திட்டம் போட்டது.
இந்தியா பேட்டிங்
மூன்றாவது டெஸ்டிலும் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முறை சுதாரிப்பாக போட்டியை துவக்கிய தென்னாப்பிரிக்கா 39 ரன்களில் 3 விக்கெட்களை வீழ்த்தியது. எனினும், ரோஹித் 212. ரஹானே 115 ரன்கள் குவித்து இந்திய அணியை 400 ரன்கள் கடக்க வைத்தனர்.
வெளிச்சமின்மை
இந்தப் போட்டியில் வெளிச்சமின்மை மற்றும் மழையால் முதல் நாள் போட்டி பாதியில் தடைபட்டது. அதே போல, இரண்டாம் நாளும் வெளிச்சமின்மை ஏற்பட்டு பாதியில் போட்டி நிறுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ரன் குவித்த இந்தியா
அதை உணர்ந்த இந்திய அணி பின் வரிசை வீரர்களை அடித்து ஆடுமாறு கூறியது. உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். 5 சிக்ஸர் அடித்து மிரட்டினார். அவரும் ஆட்டமிழந்த பின் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 500 ரன்களை நெருங்கி ஆடி வந்தது.
ஓய்வு எடுக்க திட்டம்
இன்னும் சில ஓவர்களில் எப்படியும் வெளிச்சமின்மை ஏற்படும் என்பதை உணர்ந்த தென்னாப்பிரிக்க கேப்டன் போட்டியில் நேரம் கடத்தி கடைசி விக்கெட்டை எடுக்காமல் அடுத்த நாளுக்கு இந்தியாவின் முதல் இன்னிங்க்சை எடுத்துச் செல்ல திட்டம் போட்டார்.
நேரத்தை கடத்தினார்
அதன் மூலம், இரண்டாம் நாள் கடைசியில் இந்தியா எளிதாக 2 - 3 விக்கெட் எடுப்பதில் இருந்து தப்பிக்கலாம் என கணக்கு போட்ட தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், பீல்டருக்கு ஹெல்மெட் வேண்டும் என சைகை செய்து நேரத்தை கடத்தினார்.
டிக்ளர் செய்த கோலி
அதை உணர்ந்த கோலி இந்தியா 497 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்து இருந்த நிலையில் டிக்ளர் செய்தார். விளக்கொளியில் போட்டி நடந்தாலும் லேசான வெளிச்சம் இருந்தது. நிச்சயம் சில ஓவர்கள் இந்தியா வீசலாம் என்ற நிலை இருந்தது.
தென்னாப்பிரிக்கா சரிவு
சரியாக இந்தியாவுக்கு 5 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. அதிலும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே கிடைத்தது. அப்போது வெளிச்சம் இல்லாததால், அம்பயர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துமாறு கோலியை கேட்டுக் கொண்டனர். ஷமி, உமேஷ் இருவரும் தங்களுக்கு கிடைத்த ஒரு ஓவரில் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினர்.
கோலி வீழ்த்தினார்
இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்துள்ளது. கோலி வெற்றிகரமாக தென்னாப்பிரிக்கா நேரத்தை கடத்துவதை முறியடித்து, நிலைகுலைய வைத்துள்ளார்.