தென்னாப்பிரிக்கா தொடர் வெற்றி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. அதன் மூலம் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
10 தொடர் வெற்றிகள்
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா சொந்த மண்ணில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்து இருந்தது. இந்த நிலையில், 11வது டெஸ்ட் தொடரையும் வென்று இருக்கிறது.
பெரும் உலக சாதனை
சொந்த மண்ணில் இந்திய அணி 11 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தி உள்ளது. வேறு எந்த அணியும் செய்யாத சாதனை இது. இதற்கு முன் ஆஸ்திரேலியா இரண்டு முறை தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை தங்கள் சொந்த மண்ணில் வென்றதே உலக சாதனையாக இருந்தது.
சாதனையை முறியடித்தது
ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்து கடந்த 2013 முதல் 2019 வரை நடந்த 11 டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்றுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 வெற்றிகளை குவித்துள்ளது.
ஒரே ஒரு தோல்வி
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே சொந்த மண்ணில் தோற்றுள்ளது. அது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புனேவில் மோசமான ஆடுகளத்தில் நடந்த டெஸ்ட் போட்டி. இதன் மூலம், சொந்த மண்ணில் இந்தியா தான் சிறந்த அணி என்பது மீண்டும் உறுதி ஆகி உள்ளது.
9 தொடர்கள் வெற்றி
இந்த சாதனை துவங்கிய முதல் இரண்டு தொடர்கள் மட்டுமே தோனி தலைமையில் இந்தியா ஆடியது. அடுத்த 9 தொடர்களையும் விராட் கோலி தலைமையில் இந்தியா கைப்பற்றி இருக்கிறது.
விமர்சனங்கள்
எனவே, இந்த சாதனையில் விராட் கோலிக்கு கேப்டனாக பெரும் பங்கு உள்ளது. கோலியின் கேப்டன்சி பற்றி ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் பிடிவாதமாக இருந்து இந்திய அணிக்கு இந்த வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டு
விராட் கோலியின் கேப்டன்சி இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதும், அதனால், வீரர்கள் மனதளவில் சோர்ந்து போகிறார்கள் என்பதும் தான்.
கோலியின் ஆயுதம்
கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே 11 வீரர்களை அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட வைத்த நிகழ்வு மிகவும் அரிதாகவே நடந்துள்ளது. இது மற்றவர்கள் கண்ணுக்கு தவறாக இருந்தாலும், அது தான் கோலியின் ஆயுதமாக இருந்தது.
முக்கிய திட்டம்
ஆம், ஒவ்வொரு போட்டிக்கும் அப்போதைய சூழ்நிலையை வைத்து அவர் அணியை தேர்வு செய்தார். ஆடுகளத்தின் தன்மை, வானிலை, அணியின் சமநிலை ஆகியவை தான் அவரின் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது.
இது தான் வெற்றிக்கு காரணம்
அதனால், அவர் அதற்கேற்ற வீரர்களை அணியில் தேர்வு செய்கிறார். இது பல முன்னாள் வீரர்கள் கூறுவது போல வீரர்களின் மனதை, நம்பிக்கையை பாதிக்கிறது. அதே சமயம், இது தான் இந்தியா இன்று சொந்த மண்ணில் மிகப் பெரும் வரலாற்று சாதனை செய்ய முக்கிய காரணமும் கூட. யார் என்ன சொன்னாலும், கோலி, கோலியாகத்தான் இருப்பார்!