இலங்கை டி20 தொடர்
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரண்டு போட்டிகள்
கவுஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று உள்ளது. 2017ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டி அங்கே நடைபெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர்வம்
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன ஒருநாள் போட்டியில் இந்தியா கவுஹாத்தி மைதானத்தில் ஆடியது. இந்த நிலையில், அந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆர்வமாக இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
2 போட்டிகள்
ஐபிஎல் அணிகள் தங்கள் சொந்த மைதானம் தவிர மற்ற மைதானங்களில் இரண்டு போட்டிகளை நடத்த அனுமதி உண்டு. அதை பயன்படுத்த முடிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த மைதானத்தை தேர்வு செய்துள்ளது. அதற்கு ஒரு காரணமும் உள்ளது.
ரியான் பராக்கை வைத்து திட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய ரியான் பராக் என்ற அசாம் மாநில இளம் வீரரை வைத்து, கவுஹாத்தி போட்டிக்கு பெரும் கூட்டத்தை வரவைக்க முடியும் என நம்புகிறது அந்த அணி.
பிசிசிஐ அனுமதி அளிக்கும்
2020 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ரியான் பராக்கை தக்க வைப்பதாக அறிவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கவுஹாத்தியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதிக்கும் என்றே தெரிகிறது.
சில கேள்விகள்
எனினும், அசாமில் எந்த அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கூட்டம் வரும் என்ற கேள்விகள் உள்ளன. இதற்கு விடை தேடும் வகையில் தான் இந்தியா - இலங்கை மோதும் முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
மைதானத்தில் ஏற்பாடுகள்
கவுஹாத்தி மைதான நிர்வாகிகள், ஐபிஎல் போட்டிகள் போல முதல் டி20 போட்டிக்கு டிஜே இசை அமைப்பு மற்றும் வானவேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம், எப்படியாவது பிசிசிஐ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஈர்த்து விட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
சந்தேகம் உள்ளது
அசாமில் ஐபிஎல் போட்டி நடத்துவது பற்றி சில மாதங்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் பிசிசிஐயிடம் பேசி வரும் நிலையில், இந்தியா - இலங்கை போட்டியை அந்த அணிக்காகவே பிசிசிஐ நடத்துகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
போராட்டம்
இதற்கிடையே, அசாமில் சில நாட்களாக நடந்து வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை சமாளித்து தான் முதல் டி20 போட்டி நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.