ஷமிக்கு வாய்ப்பில்லை
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் கடந்த சில போட்டிகளில் விக்கெட் எடுத்தாலும் அதிக ரன்களை கொடுத்து வந்தார். அது இந்திய அணிக்கு சிக்கலாக இருந்தது.
பந்துவீச்சு எப்படி?
இந்த நிலையில் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஜடேஜா, குல்தீப், ஹர்திக் பண்டியா இந்திய அணியில் பந்து வீசினர். இவர்களில் பும்ரா, ஜடேஜா மிகவும் கட்டுக் கோப்பாக பந்து வீசினர். ஓவருக்கு 4 ரன்களுக்கும் குறைவாக கொடுத்தனர். குல்தீப் 5.8 ரன்களும், பண்டியா 5 ரன்களும் கொடுத்தனர்.
வாரி வழங்கினார்
புவனேஸ்வர் குமார் 10 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் ஓவரை இலங்கை பேட்ஸ்மேன்கள் குறி வைத்து ரன் குவித்தனர். இதனால், இலங்கை அணி 264 ரன்கள் குவித்தது.
ஷமியின் குறைபாடு
ஷமி இங்கிலாந்து போட்டியில் 69 ரன்களும், வங்கதேசப் போட்டியில் 68 ரன்களும் கொடுத்ததால் இந்தப் போட்டியில் நீக்கப்பட்டார். புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினால் அரையிறுதியில் பும்ரா - புவனேஸ்வர் குமார் ஜோடியை களமிறக்கலாம் என நினைத்து இருந்த கோலி தற்போது குழப்பத்தில் இருக்கிறார்.
செமி பைனல் குழப்பம்
அரையிறுதிப் போட்டியில் புவனேஸ்வர் குமாரை தான் கோலி ஆட வைப்பார் என்று இலங்கை போட்டிக்கு முன் விமர்சகர்கள் பலரும் கூறி வந்தனர். ஆனால், தற்போது ஷமி, புவனேஸ்வர் குமார் இடையே யாரை தேர்வு செய்வார் என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. ஷமி ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், அதிக விக்கெட்கள் வீழ்த்தி வந்தார். எனவே, அவரை தேர்வு செய்வாரா கேப்டன் கோலி?