வானில் அதிர்ச்சி
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தன் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்தித்தது. இந்தப் போட்டியின் துவக்கத்தில், வானில் விமானம் ஒன்று சென்றது. அதன் பின்னே "காஷ்மீருக்கு நீதி வேண்டும்" என்று எழுதப்பட்ட வாசகம் பறக்கவிடப்பட்டு இருந்தது.
இரண்டு முறை
அந்த விமானம் இரண்டு முறை மைதானத்தை வலம் வந்தது. இதனால் போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ரசிகர்கள் பீதி அடைந்தனர். சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
முதல் முறையல்ல
உலகக்கோப்பை தொடரில் இது போல இரண்டாவது முறையாக இப்படி நடக்கிறது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில் இதே போல ஒரு விமானம் பலுசிஸ்தான் பகுதிக்கு நீதி வேண்டும் என்ற வாசகங்களுடன் பறந்தது. இதனால், ஐசிசி மீது கடும் அதிருப்தி எழுந்தது.
ஐசிசி அறிக்கை
விமானம் இரண்டு முறை மைதானத்தை வலம் வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முதல் சம்பவம் நடந்த போதே காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளித்து இருந்தனர். ஆனால், மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்தது அதிருப்தி அளிப்பதாக கூறி இருந்தது.
மூன்றாவது முறை
இந்த அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களில், காஷ்மீர் வாசகங்களுடன் அதே விமானம் மூன்றாவது முறையாக மைதானத்தை வலம் வந்தது. காவல்துறை, ஐசிசி என எல்லோருக்கும் பெப்பே காட்டியது அந்த விமானம்.
பழிக்குப் பழி?
பலுசிஸ்தான் குறித்த விமானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில பாகிஸ்தானியர்கள், இந்திய அணி ஆடும் போட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்த வாசகங்களுடன் விமானத்தை பறக்கவிடப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.