2015இல் முதல் வாய்ப்பு
2015ஆம் ஆண்டு தன் முதல் சர்வதேச டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடினார் சஞ்சு சாம்சன். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் பல வருடங்களாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு இல்லை
ஐபிஎல் தொடர்களிலும், உள்ளூர் போட்டிகளிலும் ரன் குவித்து வந்த சஞ்சு சாம்சன், 2019ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய டி20 அணியில் மாற்று வீரராக இடம் பெற்றார்.
மாற்று வீரர்
அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவர் பல டி20 தொடர்களில் வெளியே அமர வைக்கப்பட்டார்.
வாய்ப்பளித்த கோலி
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக ரிஷப் பண்ட்டை நீக்கி, சஞ்சு சாம்சனை களமிறக்கி அரிய வாய்ப்பை கொடுத்தார் கேப்டன் விராட் கோலி.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தப் ஒரு போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டம் ஆடினால், அவர் அணியில் நிரந்தர இடம் பிடிக்கலாம் என்ற நிலை. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின் சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டியில் வாய்ப்பு பெற்றதால் கேரள ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்தியா பேட்டிங்
இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ராகுல், தவான் அதிரடி ஆட்டம் ஆடி ரன் ரேட்டை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர்.
களமிறக்கிய கோலி
தவான் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த போது, மூன்றாவது வரிசையில் சஞ்சு சாம்சனை களமிறக்கி, அவர் தன்னை நிரூபிக்க வாய்ப்பு அளித்தார் கோலி. இதுவும் அவருக்கு அரிய வாய்ப்பாகவே அமைந்தது.
முதல் பந்தில் சிக்ஸ்
தவான் அவுட் ஆன நிலையில், தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் சஞ்சு சாம்சன். கேப்டன் கோலி முதல் அனைவரும் அவரது இந்த எதிர்பாராத அதிரடியைக் கண்டு வியந்தனர்.
அடுத்த பந்தில் அவுட்
ஆனால், அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதிரடி ஷாட் ஆட ஆசைப்பட்டு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இனி வாய்ப்பு கிடைக்குமா?
அவரது இந்த ஏமாற்றத்தால், இனி சஞ்சு சாம்சனுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைக்குமா? அடுத்த டி20 தொடரில் அவர் மாற்று வீரராகவாவது இடம் பெறுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.