வெஸ்ட் இண்டீஸ் தொடர்
கடந்த மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய பேட்டிங் வரிசையில் கோலி களமிறங்கும் மூன்றாம் இடத்தில் இரண்டு பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ரிஷப் பண்ட் மற்றும் சிவம் துபே அந்த இடத்தில் இறங்கினர்.
இரண்டு போட்டிகள்
அந்த இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்தார். இளம் வீரர்கள் பண்ட் மற்றும் துபேவின் பேட்டிங் திறனை பரிசோதனை செய்யவே கோலி அப்படி இடம் மாறி பேட்டிங் செய்து இருப்பார் என கருதப்பட்டது.
இலங்கை தொடரிலும் தொடர்ந்தது
எனினும், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இடம் மாறி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்தார். நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அணியில் இடம் பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.
ஏன் இந்த மாற்றம்?
ஏன் இந்த திடீர் பேட்டிங் வரிசை மாற்றம்? கோலி மூன்றாம் வரிசையில் களமிறங்கி பல சாதனைகளை செய்துள்ளாரே, அப்புறம் ஏன் தன் இடத்தை மாற்றி பேட்டிங் செய்கிறார்? என்ற கேள்விகள் எழுந்தன.
50 ஓவர் உலகக்கோப்பை
இந்த மாற்றத்துக்கு காரணம், 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடந்த குளறுபடிகள் மீண்டும் நடந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் சொதப்பல்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் இல்லை. மாற்று துவக்க வீரர் ராகுலை அந்த இடத்தில் ஆட வைத்தார் கோலி.
ராகுல் இல்லை
பின் தவான் காயத்தால் விலகிய போது, ராகுல் துவக்க வீரராக களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், மீண்டும் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது.
தோல்விக்கு காரணம்
இந்தியா அந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியுடன் வெளியேறியது. அதற்கு நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையாததும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் தான் கோலி டி20 அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்துள்ளார்.
2020 உலகக்கோப்பை அணி
2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து ஆடி வரும் இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயரை தான் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது.
தவறு நடந்து விடக்கூடாது
ஆனால், கேப்டன் கோலி இந்த முறை உலகக்கோப்பை தொடரில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தோனியும் இல்லாத நிலையில், தான் மூன்றாம் வரிசையில் இறங்கினால், திடீர் விக்கெட் வீழ்ச்சியின் போது அணியை வழிநடத்த அனுபவ வீரர் இல்லாத நிலை ஏற்படும்.
மிடில் ஆர்டர்
அதை தவிர்க்க தானே மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடிவு செய்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். அதே சமயம், ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அதில் கோலி மூன்றாம் இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.