தோனி விலகல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் மூத்த வீரர் தோனி. அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், விலகல் முடிவை மட்டுமே அறிவித்தார். கிட்டத்தட்ட இனி அதிக போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்ற நிலையே உள்ளது.
ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு
அதனால், தோனியின் விக்கெட் கீப்பர் பணி காத்திருப்பில் இருந்த ரிஷப் பண்ட்டுக்கு கிடைத்தது. இது மிகவும் பெரிய வாய்ப்பு என்பது ரிஷப் பண்ட்டுக்கும் தெரியும். அதற்கேற்ற அளவுக்கு அவர் செயல்படுவாரா? என்பது தான் இப்போது உள்ள கேள்வி.
ரசிகர்கள் ஆதரவு
மூத்த வீரர்கள் மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் சொதப்பிய போது ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை அணிக்கு அழைத்து வாருங்கள் என அவருக்கு ஆதரவாக கூறி வந்தனர். நாளை ரிஷப் பண்ட் சரியாக விளையாடவில்லை என்றால் அதே ரசிகர்கள் அவரை காலி செய்து விடுவார்கள் என்பதும் உண்மை.
இனி தான் சிக்கல்
ரிஷப் பண்ட் இதுவரை அணியில் ஆடிய போதெல்லாம் தோனி உடன் இருந்தார். சில டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விக்கெட் கீப்பிங் செய்துள்ளார் ரிஷப் பண்ட். அப்போதும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் மீது விமர்சனம் எழுந்தது.
தோனியுடன் ஒப்பீடு
இயல்பாகவே தோனியின் விக்கெட் கீப்பிங் திறனுடன் ஒப்பீடுகளும் துவங்கி விடும். அதனால், இனி வரும் போட்டிகளில் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் தோனி ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தப்ப முடியும்.
காத்திருக்கும் வீரர்
அது மட்டுமின்றி, ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக ஒரு இளம் விக்கெட் கீப்பர் உருவாகி இருக்கிறார். ஸ்ரீகர் பாரத் எனும் அந்த வீரர் இந்தியா ஏ அணிக்காக சமீபத்தில் நடந்த போட்டிகளில் அபார ஆட்டம் ஆடி இருக்கிறார். அவரது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்ததால், தேர்வுக் குழுவின் பார்வையில் சிக்கி இருக்கிறார்.
வெ.இண்டீஸ் தொடரில்..
தற்போது நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் ஆடுவதோடு பொறுப்பாக ஆட வேண்டும். விக்கெட் கீப்பிங்கில் பெரிய அளவில் தவறுகள் செய்யாமல் இருந்தாலே போதும். ஆனால், பேட்டிங்கில் சொதப்பினால் அணியில் அவரது இடம் பறிபோகும் அபாயம் உள்ளது. தோனி இல்லை, இனி நமக்கு தான் விக்கெட் கீப்பர் பதவி என நிம்மதி அடைய முடியாத நிலையில் இருக்கிறார் ரிஷப் பண்ட்.