வெ.இண்டீஸ் பேட்டிங்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானம் காட்டாமல் அடித்து ஆட முயன்று விக்கெட்களை விரைவாக இழந்தது. பிட்ச்சும் மோசமாக இருந்ததால், ரன் குவிக்க முடியாத நிலை இருந்தது. 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா தடுமாற்றம்
எளிதான இலக்கை துரத்தத் துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தியா 6.3 ஓவர்களில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.
முன்னே வந்த ரிஷப் பண்ட்
நான்காவது வரிசையில் மனிஷ் பாண்டே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட்டை பேட்டிங் செய்ய அழைத்தார் கோலி. இளம் வீரருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு என கூறிக் கொண்டு இருந்த போது அந்த சம்பவம் நடந்தது.
பொறுப்பில்லாத ஷாட்
ரோஹித் ஆட்டமிழந்து சென்ற அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். எந்த கட்டாயமும் இன்றி தான் ஆடிய முதல் பந்தை அடித்து ஆட முயன்றார். பந்து எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டது. இது மிக மோசமான ஷாட், தேவையே இல்லாத ஷாட் என விமர்சகர்கள் கூறினர்.
ரசிகர்கள் விமர்சனம்
ரிஷப் பண்ட்டை பெரிதாக நம்பிய ரசிகர்கள் பலர் அவர் விரைவாக ஆட்டமிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ரிஷப் பண்ட் இன்னும் முழுமையான பேட்ஸ்மேன் இல்லை. இனிமேல் தான் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். இவர் தான் அடுத்த தோனியா? என கடுமையாக விமர்சித்தனர்.
ஆதரவும் உண்டு
எனினும் சில ரசிகர்கள், ரிஷப் பண்ட் ஒன்று அடிப்பார், இல்லை ஆட்டமிழப்பார். அது தான் அவர் பாணி. அதை குறை சொல்லக் கூடாது என்றும் கூறி வருகிறார்கள். எப்படி இருந்தாலும், ரன் குவிக்கவில்லை என்றால் அணியில் இடம் பறிபோகும் என்பதே உண்மை.