குல்தீப் தான் முதல் விருப்பம்
கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பெற்று இரண்டு போட்டிகளில் ஆடினார். அதில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய அவர் கோலி - ரவி சாஸ்திரியின் ஆதரவைப் பெற்றார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன் ஆடிய அஸ்வின் அதை மேலும் சிக்கலாக மாற்றிக் கொண்டார். அதனால், தொடரின் பாதியிலேயே அணியில் இருந்து விலகினார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் காயத்தால் பாதி தொடரில் இருந்து விலகினார் அஸ்வின். அந்த வாய்ப்பில் தான் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்று தன்னை நிரூபித்தார்.
கோலி வெறுப்பு
அஸ்வின் அடிக்கடி காயம் அடைவது கேப்டன் கோலிக்கு வெறுப்பை உண்டாக்கியது. அதை அவரே பேட்டியில் கூறி இருந்தார். எல்லோருக்கும் தான் காயம் ஏற்படுகிறது. அதை சமாளித்து ஆட வேண்டும் என கூறி அஸ்வின் முக்கிய வீரர்களில் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.
முக்கிய காரணம்
இது மட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை விட வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் குறைவான விக்கெட்களை தான் வீழ்த்தி உள்ளார் அஸ்வின். இந்திய மண்ணில் 31 போட்டிகளில் 234 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள அவர், வெளிநாடுகளில் 26 போட்டிகளில் 101 விக்கெட்கள் தான் வீழ்த்தி இருக்கிறார்.
குல்தீப் என்ன செய்வார்?
அதே சமயம், குல்தீப் யாதவ்வுக்கு அனுபவம் மிக மிகக் குறைவு. சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் முன்பு போல உச்சகட்ட பார்மில் அவர் இல்லை. அஸ்வினுக்கு பதிலாக அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்றாலும், அவர் முன்பு போல விக்கெட் வேட்டை நடத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஸ்வின் கலக்கல் பார்ம்
அஸ்வினின் வெளிநாட்டு டெஸ்ட் விக்கெட்கள் குறைவாக இருந்தாலும், சமீபத்தில் அவர் கவுன்டி போட்டிகளில் பங்கேற்றார். மூன்று கவுன்டி போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில், 23 விக்கெட்கள் வீழ்த்தி நல்ல பார்மில் இருக்கிறார். அவரை பயன்படுத்துவாரா கோலி?