மழை பாதிப்பு
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. அதை சரியாக பயன்படுத்த நினைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதிர்ச்சி துவக்கம்
அவர்கள் எண்ணப்படியே இந்திய அணி முதல் சில நிமிடங்கள் தடுமாறியது. அந்த நேரத்தில் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 5, புஜாரா 2, கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.
கை கொடுத்த ரஹானே
அப்போது கை கொடுத்தார் அணியின் துணை கேப்டன் ரஹானே. ராகுலுடன் பொறுப்பாக ஆடிய ரஹானே 81 ரன்கள் குவித்தார். ராகுல் ஓரளவு சிறப்பாக ஆடி 44 ரன்கள் எடுத்தார். ஹனுமா விஹாரி 32 ரன்கள் எடுத்தார். ரஹானே சென்ற பின் மீண்டும் தடுமாற்றம் துவங்கியது.
ஜடேஜா அபாரம்
ரிஷப் பண்ட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 207 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. ஜடேஜா மட்டுமே களத்தில் இருந்த ரன் குவிக்கும் பேட்ஸ்மேன். மற்ற மூவரும் பந்துவீச்சாளர்கள். அவர்களை வைத்துக் கொண்டே ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஜடேஜா. 58 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார்.
அந்த இருவர்
ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு அளித்த இரண்டு வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா. இஷாந்த் சர்மா 60 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார். 62 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், ஜடேஜா மறுபுறம் ரன் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். பும்ரா 10வது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தார். அவர் எடுத்த ரன்கள் வெறும் 4 மட்டுமே.
வெ.இண்டீஸ் பந்துவீச்சு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு துவக்கத்தில் இருந்தது போல அதன் பின் இல்லை. ஜேசன் ஹோல்டர் வீசிய 20.4 ஓவர்களில் 11 மெய்டன் ஓவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கீமர் ரோச் 4, காப்ரியல் 3, சேஸ் 2, ஹோல்டர் 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.
நல்ல ஸ்கோர்
இந்திய அணி 96.4 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடி 296 ரன்கள் எடுத்தது. இது ஆன்டிகுவா மைதானத்தில் நல்ல ஸ்கோர் என்றே கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தால் இந்தியா எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.