அருண் ஜேட்லியும், கிரிக்கெட்டும்
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தீவிர கிரிக்கெட் ரசிகர். வெறும் ரசிகராக மட்டும் இல்லாமல், டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்திலும் பங்கு பெற்றார். அங்கு சிறப்பாக சீரமைப்புகளை செய்த அருண் ஜேட்லி, கிரிக்கெட் வீரர்களுடன் நண்பரைப் போல பழகினார்.
முன்னாள் துணை தலைவர்
மேலும், பிசிசிஐயில் துணை தலைவர் பதவியையும், இன்று உச்சத்தில் இருக்கும் ஐபிஎல் தொடரின் துவக்க காலத்தில் ஐபிஎல் நிர்வாக சபையின் உறுப்பினராகவும் இருந்தார். அதனால், அருண் ஜேட்லி மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்தது.
பிசிசிஐ எடுத்த முடிவு
இந்த நிலையில், பிசிசிஐ பொருளாளர் அனிருத் சௌத்ரி, தற்போது பிசிசிஐ-ஐ நிர்வகித்து வரும் நிர்வாக கமிட்டியிடம் அருண் ஜேட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணி இரங்கல் தெரிவிப்பது குறித்து பேசி இருக்கிறார்.
கருப்பு பட்டை
இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவி செய்த அருண் ஜேட்லிக்கு இந்திய அணி இரங்கல் தெரிவித்தே ஆக வேண்டும். அதனால், இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை நிர்வாக கமிட்டி ஏற்றுக் கொண்டது.
இன்று அணிவார்கள்
இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி வீரர்கள் இரங்கல்
முன்னதாக அருண் ஜேட்லி மறைவுக்கு டெல்லி மாநில கிரிக்கெட் வீரர்கள் வீரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, கௌதம் கம்பீர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கம்பீர் கூறுகையில் அருண் ஜேட்லி தனக்கு தந்தையைப் போன்றவர் என குறிப்பிட்டு இருந்தார்.