இந்தியா - வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடர்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 முதல் நடைபெற உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் இடம் உறுதி இல்லை
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இந்த தொடரில் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளராக யாரை பயன்படுத்தப் போகிறது என்பதில் குழப்பம் உள்ளது. அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. குல்தீப் யாதவ் தான் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.
அனுபவம் அதிகம்
அஸ்வின் 300க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்களை சாய்த்த அனுபவ வீரர் ஆவார். மிக விரைவாக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்கள் சாய்த்தவர் என்ற சாதனையையும் செய்துள்ளார். ஆனாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே ஏற்பட்ட காயத்தை காரணம் காட்டி, ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடிய குல்தீப் யாதவ்வை முன்னிலைப்படுத்தி அஸ்வினுக்கு அணியில் இடம் மறுக்கப்படலாம்.
வெ.இண்டீஸ் நிலை மோசம்
மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி சவாலான நிலையை எதிர் கொண்டுள்ளது. அந்த அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் சரிவை சந்தித்து வருகிறது. உலகக்கோப்பைக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக திடீரென சிறப்பாக ஆடியது. ஆனால், அதன் பின் மீண்டும் சரிவு தான்.
வெ.இண்டீஸ் கேப்டன் அதிரடி
அதயு குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பெரிய அணிகளை வீழ்த்துவது சவாலான காரியம். தனிப்பட்ட முறையில் நான் கோலி, அஸ்வின் சவாலை எதிர்கொண்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோலி என்ன செய்வார்?
கோலி எப்படி பேட்டிங்கில் சவால் அளிப்பாரோ, அதே போல அஸ்வின் பந்துவீச்சில் சவாலாக இருப்பார் என கூறி இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன். இப்போது கேப்டன் கோலி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விமர்சனம் எழும்
ஒருவேளை அஸ்வினை அணியில் தேர்வு செய்யாமல் விட்டு, போட்டியில் குல்தீப் யாதவ் சொதப்பினால் கேப்டனாக கோலிக்கு அழுத்தம் ஏற்படும். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோலி தவறு செய்து விட்டார் என விமர்சனம் எழும். அஸ்வினை அணியில் தேர்வு செய்வாரா கோலி?