இந்தியா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. வெளுத்து வாங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது. பீல்டிங்கின் போது பொல்லார்டு ஆடுகளத்தை விட்டு வெளியேற முயன்றார்.
பொல்லார்டு பிடிவாதம்
தான் வெளியேற வேண்டும் என்பதால் மாற்று வீரரை உள்ளே அழைக்க முயன்றார். அப்போது அம்பயர்கள் தங்களிடம் அனுமதி கேட்டு விட்டுத் தான் மாற்று வீரரை அழைக்க வேண்டும் என அவரிடம் கூறி உள்ளனர். ஆனால், பொல்லார்டு பிடிவாதமாக இருந்துள்ளார்.
ஐசிசி நடவடிக்கை
அம்பயர்கள் ஓவர் முடியும் வரை காத்திருக்குமாறு கூறியும் அதைக் கேட்காத பொல்லார்டு இடையே மாற்று வீரரை அழைத்து விட்டு, தான் வெளியேறினார். அம்பயர்கள் பேச்சை மீறியது, விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அபராதம் விதித்தனர்
போட்டிக்குப் பின் மேட்ச் ரெப்ரீ ஜெப் குரோவே விசாரணை நடத்தினார். பொல்லார்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பின் அவருக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.
நவ்தீப் சைனிக்கு தண்டனை
இதே போல, முதல் போட்டியில் நவ்தீப் சைனி தன் முதல் விக்கெட் எடுத்த பின் நிக்கோலஸ் பூரனை நோக்கி சைகை செய்த காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.
இதுக்கு நடவடிக்கை இல்லையா?
இது போல, வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சரியாக இருக்கும் ஐசிசி, அம்பயர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்ளாதா? என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உலகக்கோப்பை தொடரிலும், தற்போது நடந்த ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியிலும் அம்பயர்கள் கணக்கு வழக்கில்லாமல் தவறான தீர்ப்புகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. .