தொடர் வெற்றி
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ஒரு தோல்வி கூட பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், விராட் கோலி தான். டி20 போட்டியில் அரைசதம், ஒருநாள் போட்டியில் இரண்டு சதம் என கலக்கிய அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.
காயம் ஏற்பட்டது
மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோலி பேட்டிங் செய்த போது அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் கோலி தொடர்ந்து பேட்டிங் செய்து வந்தார். முதலில் சிறிய காயம் என்றே கூறப்பட்டது. போட்டிக்குப் பின் பேட்டி அளித்த பொதும் கோலி அதையே தான் கூறினார்.
பயிற்சிப் போட்டியில் ஓய்வு
இந்த நிலையில், பயிற்சிப் போட்டியில் கோலி ஓய்வு எடுத்துக் கொள்வார். மற்ற டெஸ்ட் வீரர்கள் ஆடி பயிற்சி எடுக்க வேண்டி கோலி ஓய்வு எடுத்துக் கொள்கிறார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், கோலிக்கு காயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.
டெஸ்ட் தொடரில் என்ன ஆகும்?
ஒரு வேளை கோலியின் காயம் பெரிதாக இருந்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் அவர் இல்லாமல் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும். அவர் இல்லாத இந்திய அணி டெஸ்ட் தொடரில் நிச்சயம் தடுமாறும். டெஸ்ட் போட்டிகளில் கோலிக்கு இணையாக ரன் எடுக்கக் கூடிய ஒரே வீரர் புஜாரா மட்டுமே.
மற்ற வீரர்கள்
ரோஹித் சர்மா, ரஹானே உள்ளிட்ட வீரர்கள் கடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி இருப்பதால் ஓரளவு நிம்மதியாக இருக்கலாம். ஆனால், பேட்டிங்கில் இந்தியா தடுமாறி விடும். எனவே, கோலிக்கு காயம் என்ற தகவல் பயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.