முதல் டெஸ்ட் அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தேர்வு செய்யப்பட போது கடும் விமர்சனம் எழுந்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
ரோஹித் நல்ல பார்ம்
ரோஹித் சர்மா கடைசியாக ஆடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நன்றாகவே ஆடினார். எனினும், குழந்தை பிறந்ததால் பாதி தொடரில் விலகிச் சென்றார். அடுத்து அவர் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் ஒருநாள் போட்டிகளில், உலகக்கோப்பை தொடரில் உச்சகட்ட பார்மில் இருந்தார்.
ரஹானே, விஹாரி எப்படி?
ரோஹித் சர்மாவின் இடத்தை தட்டிப் பறித்தது ரஹானே, ஹனுமா விஹாரி தான், இவர்களில் ஒருவரை நீக்க முடியாத கேப்டன் கோலி, ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு தரவில்லை. முதல் டெஸ்டில் ரஹானே இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் அரைசதம் அடித்து விமர்சனத்தில் இருந்து தப்பினார். விஹாரி முதல் இன்னிங்க்ஸில் 32 ரன்கள் எடுத்தார்.
சொதப்பிய ராகுல்
ரோஹித் துவக்க வீரராக கூட ஆடலாம் என சிலர் கூறி வந்தனர். அசாருதீன் கூட தற்போது கூறி இருக்கிறார். துவக்க வீரராக தற்போது ஆடி வரும் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் டெஸ்டில் 44, 38 ரன்கள் எடுத்தார். அவரால் பெரிய இன்னிங்க்ஸ் ஆட முடியவில்லை என்ற விமர்சனம் உள்ளது.
அசாருதீன் விளாசல்
இந்த நிலையில் தான் அசாருதீன் கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அணித் தேர்வை விளாசித் தள்ளி இருக்கிறார். ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் இருவரையும் விமர்சித்துள்ளார்.
பெரிய வீரர் ரோஹித்
ஹனுமா விஹாரிக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தாகி விட்டது. ரோஹித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரை அணியில் தேர்வு செய்தால் அவரை பதினோரு பேரில் ஒருவராக ஆட வைக்க வேண்டும்.
ரெக்கார்டு மோசமில்லை
ரோஹித் சர்மாவின் (டெஸ்ட்) ரெக்கார்டு ஒன்றும் மோசமில்லை. அந்த புள்ளிவிவரத்தை எல்லோரும் பார்க்கலாம். அவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலம் வாய்ப்பு பெற தகுதியானவர் என்றார் அசாருதீன்.
ராகுல் சரியில்லை
ரோஹித் துவக்க வீரராக கூட ஆடலாம். ராகுலுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து விட்டது. அவர் சரியாக ஆடவில்லை என ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் தொடர்ந்து ரன் குவிப்பதில்லை.
மரியாதை கொடுக்கணும்
அதனால், அவர் இடத்தில் ரோஹித் ஆடலாம். ரோஹித் போன்ற பெரிய வீரரை தேர்வு செய்தால், அவரை ஆட வைக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக கருத்து கூறினார் அசாருதீன்.
இடம் கிடைக்குமா?
முதல் டெஸ்ட் போட்டியில் தான் இடம் இல்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதால், இரண்டாவது போட்டியில் வெற்றிக் கூட்டணி என்று கூறி அணியை கோலி மாற்ற மாட்டார் என்பதே உண்மை.