வதந்தியா?
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியிலான பதற்றம் நிலவும் இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது, மறுபுறம் இந்த செய்தி உண்மையாக கூட இருக்கலாம் என்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்-இல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துள்ளன. இரண்டிலும் இந்திய அணி ஒரு தோல்வி அடையாமல் வெற்றி பெற்றது. அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
காஷ்மீர் பிரச்சனை
இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல், இராணுவ ரீதியிலான உரசல்கள் உச்சத்தை எட்டி உள்ளது. போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
பகீர் வதந்தி
இந்த நிலையில் தான், பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு வந்த ஈமெயில் குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வைத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஒரு ஈமெயில் வந்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
ஐசிசி-க்கு தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த ஈமெயிலை புறந்தள்ளாமல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், பொறுப்பாக நடந்து கொண்டதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. இவை பாகிஸ்தான் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த உருவான வதந்தியா? அல்லது உண்மையா? என தெரியவில்லை.
பிசிசிஐ மறுப்பு
இந்த வதந்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பதிலில் பிசிசிஐ, எந்த வகையான அச்சுறுத்தலும் இந்திய அணிக்கு இல்லை என கூறி இந்த வதந்திகளை மறுத்துள்ளது.
பாக். சில்மிஷம்?
இப்போதைக்கு இந்த தாக்குதல் தகவல் ஒரு வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஊடகங்கள் தங்கள் டிஆர்பியை ஏற்றிக் கொள்ளவோ அல்லது இந்தியாவை சீண்டவோ இது போன்ற செய்தியை பரப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது.