அணியில் இடம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் டி20 மற்றும் ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது. சுமார் 18 மாதங்கள் கழித்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார் ஸ்ரேயாஸ். இதற்கு முன் இந்திய அணிக்காக ஆறு போட்டிகளில் ஆடியுள்ள அவர் அதில் இரண்டு அரைசதம் அடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இழுவைக்கு பின் வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு அணியில் ஆடும் வாய்ப்பு உடனே கிடைத்துவிடவில்லை. டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால், அந்தப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பும் அமையவில்லை. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அரைசதம் அடித்தார்
கிடைத்த வாய்ப்பை நச்சென பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். கோலி 120 ரன்கள் குவித்த நிலையில், அவருக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்தவர் ஸ்ரேயாஸ் தான். இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் என்ன சொன்னார்?
போட்டிக்குப் பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், நான் அணியில் சிறிது காலம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து அணியில் ஆடுவது முக்கியம். நான் நன்றாக ஆடி அணிக்காக அர்பணிக்க நினைக்கிறேன் என்று கூறினார்.
இடம் உறுதியா?
அரைசதம் அடித்தாலும் அணியில் தனக்கு இடம் உறுதியா என தெரியாமல் தான் இப்படி கூறி இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். முன்பு இரண்டு அரைசதங்கள் அடித்த போதும் அணியில் இடம் கிடைக்காதது எல்லாம் கண் முன் வந்து போனதால் இப்படி பேசினாரோ?