இந்திய அணித் தேர்வு
ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம் பெறவில்லை. சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கில்லுக்கு வாய்ப்பு அளிக்காதது விமர்சனத்தை கிளப்பியது. குறிப்பாக கேதார் ஜாதவ்வுக்கு இடம் அளித்து விட்டு, ஷுப்மன் கில்லை தேர்வு செய்யாமல் விட்டதை பலரும் சுட்டிக் காட்டினர்.
ஆச்சரியம்
இந்த நிலையில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்திய அணித் தேர்வு குறித்த தன் கருத்தை கூறி இருக்கிறார். "அணியில் பல வீரர்கள் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடக் கூடியவர்கள். ஷுப்மன் கில், ரஹானே ஒருநாள் அணியில் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என்று கூறியுள்ளார் கங்குலி.
ஷுப்மன் கில் நிலை
ஷுப்மன் கில் ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்தே இந்தியா ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் துவக்க வீரராக களமிறங்கிய போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராகவும் நன்றாக ரன் குவித்து இருந்தார். அதைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறார் கங்குலி.
ஏமாற்றத்தில் கில்
எனினும், கில்லுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மூன்று அணிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும் என நினைத்தேன். தற்போது ஏமாற்றமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ரஹானே டெஸ்ட் மட்டும்
அதே போல, நீண்ட காலமாகவே ரஹானே டெஸ்ட் அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அவரை ஏன் ஒருநாள் அணியில் தேர்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார் கங்குலி. இதை பலரும், பல காலமாக கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை பதில் கிடைத்ததில்லை.
இளம் வீரர்கள் உண்டு
எனினும், இந்திய ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். உலகக்கோப்பையில் பெரிய அளவில் செயல்படாத கேதார் ஜாதவ்வுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.