இந்திய அணியில் மாற்றம்
விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்ற பின், டெஸ்ட் அணி வீரர்கள், ஒருநாள் அணி வீரர்கள், டி20 வீரர்கள் என தனித் தனியாக பிரித்து இந்திய அணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல ஒருநாள் அணியில் இடம் பெறும் வீரர்களில் பாதிக்கும் மேல் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில்லை.
அதிகரிக்கும் குழப்பம்
இதனால், வீரர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. ஒரு அணியிலாவது இடம் கிடைக்காதா என இளம் வீரர்கள் ஏங்குவதும், டெஸ்ட் அல்லது ஒருநாள் என ஏதாவது ஒரு அணியில் இருந்து நம்மை கழட்டி விட்டு விடுவார்களோ என அனுபவ வீரர்கள் தவிப்பதும் தொடர்ந்து வருகிறது.
உதாரணங்கள்
ஒருநாள் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் இடம் உறுதி என கூறி விட முடியாது. அதே போல, மற்றொரு மூத்த வீரர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
கங்குலி விளாசல்
இந்த நிலையில் தான் கங்குலி இதை விளாசி இருக்கிறார். அனைத்து கிரிக்கெட் போட்டிக்கான அணிகளுக்கும் ஒரே வீரர்களை தேர்வு செய்து, நம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிகச் சிலரே அனைத்து போட்டிக்கான அணிகளிலும் ஆடுகிறார்கள். சிறந்த அணிகள் தொடர்ந்து ஒரே வீரர்களை கொண்டிருக்கும் என குறிப்பிட்டு அணித் தேர்வை விமர்சித்துள்ளார் கங்குலி.
கிளம்பும் சர்ச்சை
அது மட்டுமில்லாமல், எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது முக்கியமல்ல, நாட்டுக்கு வேண்டிய சிறந்த வீரர்களை தேர்வு செய்வது மற்றும் அதில் தொடர்ந்து ஒரே நிலையில் இருப்பது தான் முக்கியம் என குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் கங்குலி.
யாரை சொல்கிறார் கங்குலி?
யாரை திருப்திப்படுத்த நிறைய வீரர்களை தேர்வு செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளில் பிரித்து ஆட வைப்பது என்ற சந்தேகத்தை துவக்கி வைத்துள்ளார் கங்குலி. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அல்லது சில பிசிசிஐ அதிகாரிகளைத் தான் கங்குலி மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாற்றம் ஏற்படுமா?
கங்குலி கூறியுள்ளது போல முன்பு பல வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். சிலர் மட்டுமே டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியில் மட்டும் இடம் பெறுவார்கள். கங்குலி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து மற்ற முன்னாள் வீரர்களும் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், மாற்றம் ஏற்படலாம்.