வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்
முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன. முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக்கோப்பை அணியில் இருந்து மாறுபட்ட அணியாக இந்தியா களமிறங்க உள்ளது.
அணியில் வெற்றிடம்
குறிப்பாக மிடில் ஆர்டரில் இருந்த முக்கிய வீரர்களான தோனி, கேதார் ஜாதவ் ஆகியோர் டி20 அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் அணியில் தோனி மட்டுமே இடம் பெறவில்லை. ஜாதவ் இடம் பெற்றாலும், ஒருநாள் அணியில் அவர் களமிறங்க மாட்டார். இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
வீரர்கள்
இந்த நிலையில் தோனி இடத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி எந்த வீரரை களமிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மிடில் ஆர்டரில் அதிக முறை தோனி களமிறங்கிய ஐந்தாம் இடத்தில் பேட்டிங் மூன்று வீரர்கள் பெயர் கூறப்படுகிறது. இவர்களில் ஒரு வீரர் தான் முதல் டி20யில் தோனியின் இடத்தில் பேட்டிங் செய்வார்கள். அதிலும் குறிப்பிட்ட ஒரு வீரருக்கு தான் வாய்ப்பு அதிகம்.
ஸ்ரேயாஸ் ஐயர்
அதில் முதல் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். 2௦19 ஐபிஎல் தொடரில் கலக்கல் பார்மில் இருந்தார். சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக ஆடி சிறப்பாக ரன்கள் குவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடினாலும், இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. அதனால், தற்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை இவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிஷ் பாண்டே
அடுத்தது மனிஷ் பாண்டே. இவரும் இந்திய அணியில், வருவதும் போவதுமாக இருப்பவர். உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டம் ஆடும் மனிஷ் பாண்டே, சர்வதேச போட்டிகள் என்றால் ஏனோ தடுமாறி விடுவார். ஆனால், தற்போது தோனி இல்லாத நிலையில், அணியில் ஏற்பட்டு இருக்கும் வெற்றிடத்தை நிச்சயம் விட மாட்டார் என கருதலாம்.
ரிஷப் பண்ட்
தோனிக்கு மாற்றாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ள அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். இவரது பேட்டிங் ஸ்டைல் கிட்டத்தட்ட சேவாக் போன்று இருக்கும். சிலர் இவரை அடுத்த தோனி என கூறினாலும், இதுவரை தோனி போல ஒரு ஐபிஎல் போட்டியிலோ, சர்வதேச போட்டியிலோ பொறுப்பாக நீடித்து நின்று பேட்டிங் செய்ததில்லை. சேவாக் போல வருவார், அடிப்பார், செல்வார். இது தான் இவரது ஸ்டைல்.
தோனி இடத்தில் யார்?
இவர்கள் மூவரில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான நபர். ரிஷப் பண்ட் அதிரடி வீரர் என்பதால் கடைசி நேரத்திலோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்ய களமிறக்கப்படுவார். மனிஷ் பாண்டே தான் ஐந்தாம் இடத்தில் களமிறங்குவார். ஐபிஎல் தொடரில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்யும் போது அவரது சராசரி 35 ஆகும்.