அறிமுகம் எப்போது?
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார். அந்த தொடரில் இரண்டு அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றார். அந்த தொடரில் இரு போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பு பெற்று 18, 30 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து புறக்கணிப்பு
அந்த தொடருக்குப் பின் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2018 பிப்ரவரிக்குப் பின் அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தாலும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 6 ஒருநாள் போட்டிகளில் 210 ரன்கள் குவித்து சராசரி 42 வைத்து இருக்கிறார். அவருக்கு இடம் வழங்காதது குறித்து கடந்த ஆண்டுகளில் பலரும் விமர்சித்து வந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்குப் பின் அணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.
டி20 அணியில் இல்லை
ஆனால், டி20 தொடரில் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அவருக்கு களமிறங்க வாய்ப்பு வழங்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளை வென்ற உடன் வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையிலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒருநாள் அணியில் வாய்ப்பு?
இந்த நிலையில், அடுத்து துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியில் உள்ள சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி வாய்ப்பு கிடைக்கும்?
மிடில் ஆர்டரில் ஆட ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் என நான்கு வீரர்கள் இடையே போட்டி உள்ளது. இவர்களில் பார்மில் இருக்கும் ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் நிச்சயம் இடம் பெறுவார்கள். மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இடையே தான் போட்டி நிலவும். டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற மனிஷ் பாண்டே சரியாக ஆடாத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியில் இடம் பெறுவார்.