மெய்டன் துவக்கம்
தன் கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஆடினார். அவருடன், லீவிஸ் வெ.இண்டீஸ் அணிக்கு துவக்கம் அளித்தனர். முதல் ஓவரை மெய்டனாக வீசி போட்டியை துவக்கி வைத்தார் புவனேஸ்வர் குமார். ஷமியும் ஒரு மெய்டன் ஓவர் வீசினார்.
அதிரடி ஆட்டம்
எனினும், 5வது ஓவரில் இருந்து மரண அடி அடித்தார் கிறிஸ் கெயில். 5வது ஓவரில் 16 ரன்களும், 6வது ஓவரில் 20 ரன்களும் எடுத்து இந்திய அணியை மிரள வைத்தார். அடுத்து ஏழாவது ஓவரில் 14 ரன்களும், 8வது ஓவரில் 16 ரன்களும் எடுத்தது வெ.இண்டீஸ். 12 ஓவர்களில் 121 ரன்களை எடுத்தது. புவனேஸ்வர், ஷமி, கலீல் அஹ்மது என வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன்கள் கொடுத்தனர்.
அவுட் ஆகினர்
11வது ஓவரில் லீவிஸ் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தும், 12வது ஓவரில் கெயில் 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த ஹோப், ஹெட்மயர் மிகவும் நிதானமாக ஆடினர். இருந்தும் அந்த அணி 22 ஓவர்களில் 158 ரன்கள் குவித்து இருந்தது.
போட்டி தடை
அப்போது மழை பெய்ததை அடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் மழை பெய்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இந்திய அணி இப்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடியில் இருந்து தப்பி உள்ளது.
முதல் மழை
முன்னதாக போட்டி துவங்கி, 9 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை பெய்தது. அதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் துவங்கியது.
அணியில் மாற்றம்
இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்ற குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, சாஹல் அணியில் சேர்க்கப்பட்டார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.