காயத்தால் தவித்த புவனேஸ்வர்
கடந்த 2018 ஐபிஎல் தொடர் முதல் புவனேஸ்வர் குமார் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் பாதியில் நாடு திரும்பினார். அதன் பின்பும் அணியில் வருவதும், போவதுமாகவே இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த அவர், அதன் பின் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து மீண்ட அவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அணியில் இடம் பெற்றார்.
மீண்டும் காயம்
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அவருக்கு வலது இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டது. முதலில் அது தசைப் பிடிப்பாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
எனினும், பிசிசிஐ மருத்துவக் குழுவால் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் உள்ளிட்ட தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் குடலிறக்கதிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
அடுத்த திட்டம்
மேற்கொண்டு, புவனேஸ்வர் குமாருக்கு என்ன சிகிச்சைகள் அளிப்பது, அவர் எப்போது அணிக்கு திரும்பலாம் என்பது குறித்து சிறப்பு மருத்துவரிடம் பிசிசிஐ ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடரில் நீக்கம்
புவனேஸ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஆட முடியாத நிலையில், அவர் ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரையும் அறிவித்துள்ளது பிசிசிஐ.
இளம் வீரருக்கு வாய்ப்பு
மாற்று வீரராக இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் ஒருநாள் போட்டியில் ஆடினார்.
வாய்ப்பு கிடைக்குமா?
எனினும், இவருக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்படுகிறது. தீபக் சாஹர், முகமது ஷமி ஆகிய இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் சிவம் துபே பகுதி நேர வேகப் பந்துவீச்சாளராக செயல்படுவார்.
தவான் காயம்
இந்த ஒருநாள் தொடரில் சில நாட்கள் முன்பு துவக்க வீரர் தவான் காயத்தால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார்.