வியப்பு
அப்போது ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர்கள் ரவீந்திர ஜடேஜா - ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடி 49வது ஓவரிலேயே அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஜடேஜா அதிரடியாக ஆடுவார் என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால், ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடியது வியப்பை ஏற்படுத்தியது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணி துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடியது.
பூரன், பொல்லார்டு அதிரடி ஆட்டம்
எனினும், நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடியதால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 118 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 315 ரன்கள் சேர்த்தது. நிக்கோலஸ் பூரன் 89, கீரான் பொல்லார்டு 74 ரன்கள் சேர்த்தனர்.
கடின இலக்கு
316 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை அபார துவக்கம் அளித்தது ராகுல், ரோஹித் சர்மா ஜோடி. ரோஹித் 63, ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.
மிடில் ஆர்டர் ஏமாற்றம்
அடுத்து கோலி பொறுப்பாக ஆடினார். ஸ்ரேயாஸ் ஐயர் 7, ரிஷப் பண்ட் 7, ஜாதவ் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். கோலி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி வந்தார். ஜடேஜா அவருக்கு ஒத்துழைத்து ஆட இந்தியா கடைசி 4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை அடைந்தது.
கோலி அவுட் ஆனார்
அப்போது 47வது ஓவரின் முதல் பந்தில் கோலி 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அடுத்து பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஜடேஜா பேட்டிங் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
சிஎஸ்கே ஜோடி
வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய வந்தார். ஜடேஜா - ஷர்துல் தாக்குர் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒன்றாக ஆடியவர்கள். ஷர்துல் தாக்குர் இதுவரை பெரிதாக ரன் குவித்து யாரும் பார்க்காத நிலையில், வந்தவுடன் முதல் பந்தில் ஃபோர் அடித்தார்.
அதிரடி ஆட்டம் ஆடிய ஷர்துல்
47வது ஓவரில் 8 ரன்கள் எடுத்தது இந்திய அணி. அடுத்து 48வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து மிரட்டினார் ஷர்துல். அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தது இந்தியா.
இந்தியா வெற்றி
49வது ஓவரில் ஜடேஜா தன் பங்கிற்கு ஒரு ஃபோர் அடிக்க இந்திய அணி 48.4 ஓவரில் வெற்றி பெற்றது. தாக்குர் 6 பந்துகளில் 17 ரன்களும், ஜடேஜா 31 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்கு காரணம்
கோலி ஆட்டமிழந்த போதே போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது அதிரடி காட்டிய ஷர்துல் தாக்குர் - ஜடேஜாவால் தான் இந்தியா அடுத்த 15 பந்துகளில் 30 ரன்கள் குவித்து, சேஸிங் செய்து வென்றது. ரோஹித், ராகுல், கோலி அரைசதம் அடித்து இருந்தாலும், கடைசி நேரத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது ஜடேஜா - ஷர்துல் தாக்குர் தான்.