வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள்
அதன் படி மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருடன் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மதுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கேஎல் ராகுல், தீபக் சாஹர், ராகுல் சாஹர் அணியில் வாய்ப்பு பெற்றனர்.
இந்திய அணி பந்துவீச்சு
மூன்றாவது டி20யில் இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் துவக்கத்தில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அந்த மூன்று விக்கெட்களையும் வீழ்த்தியது இளம் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தான்.
தீபக் சாஹர் கலக்கல்
புவனேஸ்வர் குமாருடன் பந்து வீசத் துவங்கிய தீபக் சாஹர் தான் வீசிய முதல் ஓவரில் சுனில் நரைன் விக்கெட்டையும், இரண்டாவது ஓவரில் லீவிஸ், ஹெட்மயர் விக்கெட்டையும் வீழ்த்தினார். 3 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் மற்றும் 3 விக்கெட்கள் கைப்பற்றினார் தீபக்.
சிஎஸ்கே வீரர்
கடந்த 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார் தீபக் சாஹர். தொடர்ந்து விக்கெட்கள் எடுத்தும், ரன்களை கட்டுப்படுத்தியும் அசத்திய தீபக் சாஹர், அதன் காரணமாகவே இந்திய அணிக்குள் ஒரு இடைவேளைக்குப் பின் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தோனி பட்டை தீட்டினார்
சிஎஸ்கே அணியில் இரு வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் ஆட முடியாத நிலை ஏற்பட்ட போது, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இருக்கும் வீரர்களை வைத்து சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அப்போது தீபக் சாஹரை பட்டை தீட்டத் துவங்கினார் தோனி. அதன் காரணமாகவே, முன்பு இருந்ததை விட சிறப்பாக செயல்பட்டார்.
தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா?
தற்போது முதிர்ச்சி அடைந்த வேகப் பந்துவீச்சாளராக காட்சி அளிக்கும் தீபக் சாஹர், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பிலேயே தன்னை நிரூபித்து விட்டார். இனி இவருக்கு தொடர்ந்து அணியில் கிடைக்குமா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.