முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா 2 - 1 என கைப்பற்றி இருந்தது.
டாஸ் தோல்வி
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸில் தோல்வி அடைந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா துவக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க திணறியது.
கோலி, ரோஹித் ஏமாற்றம்
ஷெல்டன் காட்ரல் வீசிய முதல் 5 ஓவர்களில் 3 ஓவர்கள் மெய்டனாக வீசினார். அவரது பந்துவீச்சில் 7 வது ஓவரில் ராகுல் 6, கோலி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ரோஹித் சர்மா 36 ரன்களில் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் - பண்ட்
இந்தியா 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் கூட்டணி சிறப்பாக ஆடியது. ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பண்ட் 71 ரன்கள் குவித்தனர்.
இந்தியா ஸ்கோர்
மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. காட்ரல் 2, கீமோ பால் 2, ஜோசப் 2, பொல்லார்டு 1 விக்கெட் வீழ்த்தினர்.
சவால் விட்ட இந்தியா
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான, மந்தமான சென்னை ஆடுகளத்தில் இந்தியா 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவால் விடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் சுனில் ஆம்ப்ரிஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹோப் - ஹெட்மயர் ஜோடி
அதன் பின் ஜோடி சேர்ந்த ஹோப் - ஹெட்மயர் நிதானமாக ஆடினர். ஹெட்மயர் ஒரு கட்டத்தில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற வேகத்தில் ரன் குவித்தார். ஷாய் ஹோப் டெஸ்ட் போட்டி போல அசராமல் 50க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து வந்தார்.
மோசமான நிலை
35 ஓவர்களையும் தாண்டி சீராக ரன் குவித்து வந்தது இந்த ஜோடி. இவர்களை பிரித்தால் தான் இந்தியாவுக்கு வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இந்தியா தவித்தது. அந்த மோசமான நிலைக்கு காரணம், இந்திய அணியின் அணித் தேர்வு தான்.
கோலி அணித் தேர்வு
கேப்டன் கோலி இந்தப் போட்டிக்கு ஷமி, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஜடேஜா என நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களையும், கேதார் ஜாதவ், சிவம் துபே என இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்தார். அந்த இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் விளாசித் தள்ளியது இந்த ஜோடி. அது மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்தது.
இந்தியா தோல்வி
ஹெட்மயர் 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹோப் - நிக்கோலஸ் பூரன் ஜோடி மீண்டும் நிதான ஆட்டம் ஆடி விக்கெட் விழாமல், ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் போட்டியை 48வது ஓவர் வரை எடுத்துச் சென்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். ஹோப் 102 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஒருநாள் தொடரில் 1 - 0 என பின்தங்கி உள்ளது.