முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 288 ரன்கள் வெற்றி இலக்கை எந்த சிரமமும் இன்றி எட்டியது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணியால் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
கோலியின் அணித் தேர்வு
இந்தப் போட்டிக்கான அணித் தேர்வில் கேப்டன் கோலி ஆறு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தார். நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, தீப சாஹர், குல்தீப் யாதவ், ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.
ஆல் - ரவுண்டர்கள் தேர்வு
ஆல் - ரவுண்டர்களான சிவம் துபே, கேதார் ஜாதவ்வும் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நிச்சயம் 10 ஓவர் வீசியாக வேண்டிய கட்டாயம் தான் இருந்தது, சிவம் துபேவுக்கு இது ஒருநாள் போட்டி அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?
கேப்டன் கோலி அதிகப்படியாக நம்பிக்கை வைத்து முழுமையான ஐந்தாவது பவுலர் இல்லாமல் போட்டியில் களமிறங்கியது தான் வினையாக முடிந்தது. நான்கு பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியும், ஐந்தாவது பந்துவீச்சாளர் அதிக ரன்கள் கொடுத்துக் கொண்டே வந்ததால், வெ.இண்டீஸ் அணிக்கு எந்த இடத்திலும் ரன் ரேட் அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது.
நிதானம்
இந்தியா நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்கள் அடித்த போது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹோப் - ஹெட்மயர் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி துபே, ஜாதவ் பந்து வீச்சில் அதிக ரன்கள் குவித்தது.
கடைசி வரை தடுமாற்றம்
தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் ஓவருக்கு ஐந்து ரன்களுக்கும் குறைவாக கொடுத்து சிறப்பாக பந்து வீசினாலும் அவர்களால் அதிக விக்கெட் வீழ்த்த முடியவில்லை. சாஹர் 1, ஷமி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர்.
வேறு வழி இல்லை
கடைசி 10 ஓவர்களில் கோலி யாரை பந்து வீச வைப்பது என புரியாமல் விழி பிதுங்கி நின்றார். காரணம், எப்படியும் துபே, ஜாதவ் பந்து வீசினால் ரன் அடிப்பார்கள் என்ற நிலை. அவர்களை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதால் தடுமாறினார்.
துபே நிலை
சிவம் துபே 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்தார். கேதார் ஜாதவ் 1 ஓவர் வீசி 11 ரன்கள் கொடுத்தார். ஜாதவ்வுக்கு கூடுதல் ஓவர்கள் கொடுத்திருக்கலாம். எனினும், கோலி ஒரு ஓவரோடு நிறுத்திக் கொண்டார்.
என்ன செய்திருக்கலாம்?
இந்தியா ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்களோடு கூடுதலாக சிவம் துபேவை அணியில் ஆடச் செய்து இருக்கலாம். ஷர்துல் தாக்குர், சாஹல் ஆகியோர் வெளியே அமர வைக்கப்பட்டனர். இவர்களில் சாஹலை அணியில் சேர்த்து, ஜாதவ்வை நீக்கி இருக்கலாம்.
குல்தீப் - சாஹல் ஜோடி
குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி சேர்ந்து பந்து வீசினால் நிச்சயம் விக்கெட் வேட்டை தான் என்ற நிலையில், அவர்களை சேர்த்து களமிறக்கி இருக்கலாம். ஜாதவ் வெளியேறினால் பேட்டிங் பலம் குறையும் என்றாலும், ஜடேஜா, துபே இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் அந்த குறை பெரிதாக இருக்காது.