மூன்றாவது போட்டியில் தோற்றால்..
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இரு அணிகளும் பங்கேற்றன.
முதலில் தடுமாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 32வது ஓவரில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் நிதான ஆட்டமே ஆடினர். பெரிய அளவில் ரன்களும் குவிக்கவில்லை.
வெ.இண்டீஸ் விளாசல்
ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் முதலில் நிதான ஆட்டம் ஆடி பின்னர் அதிரடிக்கு மாறினார். அவருடன் கேப்டன் பொல்லார்டும் ஜோடி சேர்ந்து விளாசினார்.
நிக்கோலஸ் பூரன் அதிரடி
நிக்கோலஸ் பூரன் 51 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இருந்தார். எனினும், கடைசி 5 ஓவர்களில் தன் அதிரடியை இறக்கிய அவர் 64 பந்துகளில் 89 ரன்கள் குவித்த பின்னரே ஆட்டமிழந்தார்.
அந்த யுவராஜ் சிக்ஸர்
அவர் ஆட்டமிழக்கும் முன், 48வது ஓவரில் ஒரு அசத்தல் சிக்ஸ் அடித்தார். இடது கை பேட்ஸ்மேன் ஆன பூரன், யுவராஜ் சிங் போலவே தன் உடலை திருப்பி, டீப் ஸ்கொயர் திசையில் உயர செல்லும் படி பந்தை அடித்து சிக்ஸராக மாற்றினார்.
இந்தியா சொதப்பல்
முதல் 40 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 197 ரன்கள் குவித்து இருந்த நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்தியா 118 ரன்களை வாரி வழங்கி ஏமாற்றம் அளித்தது. 48வது ஓவரில் பூரன் காட்டிய அதிரடியில் 21 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
நழுவிய கேட்ச் வாய்ப்புகள்
இந்தியா கடைசி நேர பந்துவீச்சில் சொதப்பியதை போலவே, பீல்டிங்கில் போட்டி முழுவதும் சொதப்பியது. பல கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டு வேடிக்கை பார்த்தனர் இந்திய வீரர்கள்.
பேட்டிங் தடுமாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 315 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து இந்தியா சேஸிங் செய்தது. ரோஹித் 63, ராகுல் 77 ரன்கள் குவித்தாலும், ஸ்ரேயாஸ் 7, ரிஷப் பண்ட் 7 ஏமாற்றினர். கோலி தனி ஆளாக அரைசதம் கடந்து போராடினார்.