அகமதாபாத்: இந்தியா Vs மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத் நகரில் தொடங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் 1000வது ஒருநாள் போட்டி இதுவாகும். இதனால் பி.சி.சி.ஐ. இந்தப் போட்டியை சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தது.
அதன் படி, 1000வது போட்டிக்காக பிரத்யேக ஜெர்சி, வீரர்களுக்கு பதக்கம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நினைவு பரிசு வழங்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் தீவிர பயோ பபுளில் இருப்பதால் , பெரிய அளவில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தியாவின் ஆயிரமாவது ஒருநாள் போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மைதானத்திற்குள் வர அனுமதி இல்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக போட்டியை நடத்தும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அகமதாபாத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமலேயே நடைபெறும். இந்த நிலையில் டி20 தொடர் கொல்கத்தாவில் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு மேற்குவங்க அரசு, 75 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் பார்வையாளர்களை அனுமதிப்பதா இல்லையா என்பதை வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ.யே முடிவு செய்யும்.