சென்னை ஒருநாள் போட்டி
சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா பேட்டிங்
இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. 7வது ஓவரிலேயே ராகுல் 6 ரன்கள் எடுத்தும், கேப்டன் கோலி 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்தியா 25 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஸ்ரேயாஸ், பண்ட் பேட்டிங்
சிறிது நேரம் நிதான ஆட்டம் ஆடிய ரோஹித் சர்மா 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் பொறுப்பாக ஆடினர்.
இருவரும் அரைசதம்
ஸ்ரேயாஸ் ஐயர் தன் 5வது ஒருநாள் போட்டி அரைசதம் கடந்து அசத்தினார். நீண்ட நாட்களாக மோசமான பேட்டிங்கால் விமர்சனத்தை சந்தித்து வந்த பண்ட் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜா பேட்டிங்
அடுத்து ஜாதவ், ஜடேஜா பேட்டிங் ஆடி வந்தனர். கீமோ பால் வீசிய 48வது ஓவரின் மூன்றாவது பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் கேதார் ஜாதவ் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் ஜடேஜா ஒரு சிங்கிள் ரன் ஓடினார்.
ரன் அவுட் இல்லை
ஜடேஜா ஓடி முடித்த போது, பந்து ஸ்டம்பில் நேரடியாக அடித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர். எனினும், யாரும் பெரிய அளவில் அவுட் கேட்கவில்லை. ராஸ்டன் சேஸ் மட்டுமே இது அவுட்டா? என அம்பயர் அருகே சென்று கேட்டார். அம்பயர் அவுட் இல்லை என மறுத்து விட்டார்.
வெளியான ரீப்ளே
அடுத்த பந்துக்கு வீரர்கள் தயாரான போது மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காட்டப்பட்ட ரீப்ளே மூலம், ஜடேஜா பேட்டை கிரீஸில் வைக்கவில்லை என்பது தெரிய வந்தது. எனினும், அம்பயர் மறுத்துவிட்டார் என்பதால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிலை.
மூன்றாவது அம்பயர்
எனினும், அம்பயர் திடீரென அடுத்த பந்தை வீசுவதை தாமதப்படுத்தி, மூன்றாவது அம்பயரிடம் முடிவு கேட்டார். அவர் ஜடேஜா அவுட் என தீர்ப்பு கொடுக்க ஜடேஜா களத்தை விட்டு வெளியேறினார்.
விதிப்படி தவறு
கிரிக்கெட் விதிப்படி வீரர்கள் அவுட் கேட்டு அம்பயர் அவுட் மறுத்ததோடு அந்த பந்து முடிந்து விட்டது. அதன் மீது மேலும் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதே நிலை. ஆனால், இங்கே அடுத்த பந்தை வீசும் முன் காட்டப்பட்ட ரீப்ளேவால் முடிவை மாற்றி இருக்கிறார் அம்பயர்.
கொந்தளித்த கோலி
ஜடேஜா அவுட் தான் என்றாலும் அம்பயர் பின்பற்றிய முறை தவறு. இதைக் கண்ட கேப்டன் கோலி உடை மற்றும் அறையில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் கோபமாக நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார். அதனால், பரபரப்பு எழுந்தது. ஜடேஜா சென்ற பின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுக்க, இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 287 ரன்கள் எடுத்தது.