தோனி இடத்தில் பண்ட்
இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இணைந்தவர் தான் ரிஷப் பண்ட். டெஸ்ட் அணியில் கலக்கலாக சதம் அடித்து, சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி இல்லாத நிலையில், அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்தார்.
நீண்ட பார்ம் அவுட்
எனினும், பேட்டிங்கில் மோசமான ஷாட் ஆடி அவுட் ஆவதை வழக்கமாக வைத்திருந்த பண்ட் கடும் விமர்சனத்தை சந்தித்தார். அதைத் தொடர்ந்து அவர் பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆனார். விக்கெட் கீப்பிங்கிலும் பல தவறுகளை செய்து விமர்சனத்தை சந்தித்தார்.
தொடர் வாய்ப்புக்கள்
அப்படி இருந்தும் அவரது இயல்பான திறன்களை மனதில் வைத்து அவருக்கு நீண்ட வாய்ப்பு தர முடிவு செய்தது இந்திய அணி. ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்தாலும், இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்றார் பண்ட்.
நம்பிக்கை இழந்தார்
எனினும், ரசிகர்கள் ரிஷப் பண்ட் தவறு செய்யும் போதெல்லாம் மைதானத்தில் "தோனி, தோனி" என கோஷம் எழுப்பி அவரை வெறுப்பேற்றி வந்தனர். அதனால், தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டார் பண்ட்.
பொறுப்பான ஆட்டம்
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில் பொறுப்பாக ஆடி அணிக்கு கை கொடுத்தார்.
அரைசதம் அடித்தார்
தன் முதல் ஒருநாள் போட்டி அரைசதம் கடந்த ரிஷப் பண்ட் 69 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த முறை அடித்து ஆட வேண்டும் என அவசரப்படாத பண்ட் ,முதலில் நிதானம் காட்டி, பின் வேகம் எடுத்தார். ஒரு சிக்ஸ், 7 ஃபோர் அடித்து இருந்தார்.
ரசிகர்கள் கப்சிப்
தன் பொறுப்பான ஆட்டம் மூலம் நீண்ட கால விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் பண்ட். அவர் பேட்டிங் ஆடினாலே இணையத்தில் அவரை கண்டமேனிக்கு விமர்சிக்கும் கூட்டம், இந்தப் போட்டியின் போது கப்சிப் என அடங்கி இருந்தது.
நம்பிக்கை பெற்றார்
தன் ஆட்டத்தின் மூலம் தனக்கு, தானே நம்பிக்கை ஊட்டிக் கொண்டார் ரிஷப் பண்ட். அவர் ஆட்டமிழந்து செல்லும் போது அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தான் சென்றார். அவரது ஆட்டம் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் ஆறுதலாக அமைந்தது.
இந்தியா 287 ரன்கள்
80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த இந்தியா, பண்ட் 71, ஸ்ரேயாஸ் ஐயர் 70 ஆட்டம் மூலம், 50 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தது.