இடைவிடாமல் கிரிக்கெட்
இந்திய அணி இடைவிடாமல் கிரிக்கெட் ஆடி வருகிறது. கடந்த 2018 முழுவதும் கிரிக்கெட் ஆடிய இந்திய அணி வீரர்கள், தொடர்ந்து 2019 முழுவதும் ஐபிஎல், உலகக்கோப்பை என கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது.
வீரர்கள் சுழற்சி முறை ஓய்வு
அதனால், இந்திய வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படுகிறது, டெஸ்ட் அணியில் மட்டும் ஆடும் வீரர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் வீரர்களுக்கு சுழற்சி முறை ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
ரோஹித் வேலைப்பளு
துணை கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் அணியிலும் முக்கிய வீரராக மாறி இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் ஐபிஎல் தொடரையும் சேர்த்து 60 போட்டிகளில் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது.
ஓய்வு அளிக்க முடிவு
அதனால், அவரது வேலைப்பளுவை கணக்கில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். தற்போது வங்கதேச தொடரில் ஆடி வருகிறார் ரோஹித் சர்மா. அடுத்து நடைபெறும் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்
வரும் டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
நியூசிலாந்து தொடர்
அதை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 40 நாட்களுக்கு அங்கே தங்கி கிரிக்கெட் விளையாட உள்ளது. அது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அங்கே நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வருவதால், அதில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.
ரோஹித் முடிவு என்ன?
முக்கிய தொடர்கள் இருப்பதால், ஓய்வு அளிக்க நினைத்தாலும், ரோஹித் சர்மா தனக்கு இப்போதைக்கு ஓய்வு தேவை இல்லை என கூறியதாக மும்பை மிரர் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
கட்டாய ஓய்வு?
ரோஹித் சர்மா விரும்பாவிட்டாலும், அவரை ஓய்வு எடுத்துக் கொள்ள சம்மதிக்க வைக்க இந்திய அணி நிர்வாகம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின் போது தான் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.
கோலி ஓய்வு எடுத்தார்
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் போது கேப்டன் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். அவரும் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருவதால் ஓய்வு எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.
ஓய்வை மறுத்த நிகழ்வு
உலகக்கோப்பை முடிந்த பின்னரே கோலி ஓய்வு எடுத்துக் கொள்வார் என கூறப்பட்டது. ஆனால், அப்போது கோலி தனக்கு ஓய்வு வேண்டாம் என மறுத்து விட்டு அந்த தொடரில் பங்கேற்றார். அதே போல, தற்போது ரோஹித் சர்மா தனக்கு ஓய்வு வேண்டாம் என மறுத்தாலும், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்க முயற்சி நடந்து வருகிறது.