காரணம் யார்?
இத்தனைக்கும் காரணம் ஒரு தெரு நாய். பரபரப்பாக போட்டி நடந்து வந்த போது நாய் நடுவே புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. சென்னை ரசிகர்கள் அந்த நாயின் சேட்டையை ரசித்து கைதட்டி மகிழ்ந்தனர்.
வெ.இண்டீஸ் டாஸ் வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ராகுல் 6 ரன்களில் வெளியேறினார்.
இந்தியா தவிப்பு
அடுத்து வந்த கேப்டன் கோலி 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ரோஹித் சர்மாவும் 36 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இந்தியா 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மூத்த வீரர்கள் இன்றி தவித்தது.
ஆட்டத்தில் கவனம்
அப்போது ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணி பிரிந்தால் இந்தியா சிக்கலான நிலைக்கு தள்ளப்படும் என்பதால் இருவரும் கவனமாக ஆடி வந்தனர்.
உள்ளே வந்த நாய்
இந்த நிலையில், 26வது ஓவருக்கு முன் அந்த சம்பவம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர் கீமோ பால் பந்து வீச தயாரானார். ஆனால், ஒரு நாய் ஆடுகளத்துக்குள் புகுந்தது.
|
போட்டி நிறுத்தம்
அதனால், போட்டி அப்படியே சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. மைதான ஊழியர்கள் நாயை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்கெல்லாம் மசியாத அந்த நாய் வேகமாக இங்கும், அங்கும் ஓடியது.
|
சென்னை ரசிகர்கள் உற்சாகம்
அதைக் கண்ட சென்னை ரசிகர்கள் பெரும் கூச்சல் எழுப்பி உற்சாகமாக நாயின் சேட்டையை ரசித்தனர். யாருக்கும் பிடிபடாத நாய் தானாகவே பவுண்டரி எல்லையை கடந்து வெளியே ஓடியது. அதன் பின்பே போட்டி மீண்டும் தொடர்ந்தது.
|
இந்தியாவுக்கு சவால்
ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பண்ட் 71 ரன்கள் எடுத்தனர். இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பேட்டிங் ஆடியது. ஹெட்மயர் அரைசதம் கடந்து ஆடி இந்திய அணிக்கு பெரும் சவால் கொடுத்தார்.