முதல் டி20 போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்தது இந்திய அணி.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் துவக்க வீரர் சிம்மன்ஸ் தவிர அத்தனை பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன் சேர்த்தனர். லீவிஸ் 40, பிரான்டன் கிங் 31, ஹெட்மயர் 56, பொல்லார்டு 37, ஹோல்டர் 24 ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது.
ஏமாற்றிய ரோஹித்
இமாலய இலக்கை சேஸிங் செய்த இந்திய அணியின் பெரிய நம்பிக்கையாக இருந்த சிக்ஸர் மன்னன் ரோஹித் சர்மா 8 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அது அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
ராகுல் அதிரடி
அடுத்து கோலி பேட்டிங் செய்ய வந்தார். தவான் அணியில் இடம் பெறாத நிலையில், துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் அதிரடியாக ஆடி வந்தார். எனினும், கோலி திணறி வந்தார்.
கோலி தடுமாற்றம்
ரோஹித் வெளியேறிய பின் களமிறங்கிய கோலி, தன் முதல் ரன்னை எடுக்கவே 5 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதற்குள்ளாகவே அவர் இரண்டு முறை இன்சைட் எட்ஜ், தவறான புல் ஷாட் என தன் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
25 பந்துகள் வரை திணறல்
பல எட்ஜ்ஜான ஷாட்கள், தவறான டைமிங்கில் ஷாட்கள் அடித்த கோலி ரன் குவிக்க முடியாமல் திணறினார். முதல் 25 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார் கோலி. ரன் எடுக்க முடியாத அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள், அம்பயரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் கோலி. அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
அதிரடி ஆட்டம்
12வது ஓவரில் தான் கோலி சற்றே தெளிவடைந்தார். அந்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார். அடுத்து ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின் கோலி போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார்.
94 ரன்கள் விளாசல்
முதல் 25 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, அடுத்த 25 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இந்தியா 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
அதை பின்பற்ற வேண்டாம்
போட்டி முடிந்த பின் பேசிய கோலி, இளம் வீரர்கள் தன் ஆட்டத்தின் முதல் பாதியை பின்பற்ற வேண்டாம். அது மிகவும் மோசமானது. நான் அதிகப்படியாக அடித்து ஆட முயன்றேன். ஆனால், அது சரியாக வரவில்லை என்று தன் தவறை ஒப்புக் கொண்டார் கோலி.
தவறை திருத்திக் கொண்ட கோலி
என்ன தவறாக சென்றது என்பதை ஆராய்ந்து இரண்டாம் பாதியில் அதற்கேற்ப ஆடினேன். நான் அடித்து ஆடுபவன் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதனால், டைமிங்கை புரிந்து கொண்டு ஆட முயன்றேன் என்றும் கூறினார் கோலி.