தீர்ப்பு மாற்றம்
முதலில் அவுட் இல்லை என அம்பயர் கூறிய நிலையில், பின்னர் மூன்றாவது அம்பயருக்கு முடிவை அனுப்பி தீர்ப்பு மாற்றப்பட்டது. அது குறித்து தான் கோலி தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஸ்டம்பில் அடித்தார் சேஸ்
இந்தப் போட்டியில், ஜடேஜா 48வது ஓவரில் பேட்டிங் செய்து வந்த போது, அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ரன் ஓடினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் பந்தை எடுத்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார்.
அம்பயர் மறுப்பு
அம்பயரிடம் சேஸ் இது அவுட்டா? எனக் கேட்டார். அம்பயர் அவுட் இல்லை என மறுத்துவிட்டார். கள அம்பயர் மூன்றாவது அம்பயரிடம் ரன் அவுட் முடிவை கேட்கவில்லை. இந்த நிலையில் அடுத்த பந்தை வீச வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தயாரானார்கள்.
மீண்டும் முறையீடு
ராஸ்டன் சேஸ் அப்போது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பான அந்த ரன் அவுட் ரீப்ளேவை பார்த்தார். அதில் ஜடேஜா ரன் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து அவரும், கேப்டன் பொல்லார்டும் அம்பயரிடம் முறையிட்டனர்.
ரன் அவுட் என தீர்ப்பு
இந்த நிலையில், கள அம்பயர் மூன்றாவது அம்பயரிடம் முடிவை விட்டார். இதையடுத்து, ஜடேஜா ரன் அவுட் தான் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜடேஜா அவுட் தான் என்றாலும், முறை தவறி அம்பயர் நடந்து கொண்டார்.
கோலி விளாசல்
திரையில் ஒளிபரப்பான ரீப்ளே தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இதைக் கண்ட கோலி கோபத்தில் கொந்தளித்தார். போட்டி முடிந்த இது பற்றி பேசிய கோலி. இப்படி ஒரு விஷயம் கிரிக்கெட்டில் நடந்து தான் பார்த்ததில்லை என தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். "டிவி மக்களையும்" விளாசினார்.
டிவி மக்கள்
"இது குறித்த எண்ணம் எளிதானது. பீல்டர் அவுட்டா? எனக் கேட்டார். அம்பயர் அவுட் இல்லை என்றார். அந்த அவுட் விவகாரம் அங்கேயே முடிந்து விட்டது. வெளியே டிவியில் அமர்ந்து இருக்கும் மக்கள், பீல்டருக்கு சொல்லி, அவர்கள் அம்பயரிடம் சொல்லி அதை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள்" என காட்டமாக கூறினார் கோலி.
பார்த்ததே இல்லை
"கிரிக்கெட்டில் இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை. விதிகள் எங்கே போனது என தெரியவில்லை. எது எல்லை என்பதும் தெரியவில்லை. அம்பயர் மற்றும் ரெப்ரீ இது குறித்து மீண்டும் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார் கோலி.
அதிகாரம் செய்யக் கூடாது
"கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் முடிவு செய்ய வேண்டும். வெளியே அமர்ந்து இருக்கும் மக்கள், உள்ளே ஆடுகளத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை அதிகாரம் செய்யக் கூடாது. ஆனால், அது தான் இங்கே நடந்து இருக்கிறது என நினைக்கிறேன்" என்று விளாசித் தள்ளினார் கோலி.