இரண்டாவது டி20 போட்டி
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.
பேட்டிங் சொதப்பல்
ரோஹித் சர்மா 15, ராகுல் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கோலி அதிரடி முடிவு எடுத்து சிவம் துபேவை மூன்றாம் வரிசையில் களமிறக்கினார். அந்த முடிவு சரியாக வேலை செய்தது. துபே 30 பந்தில் 54 ரன்கள் குவித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் கடைசி நான்கு ஓவர்களில் சரியாக ரன் குவிக்க முடியாமல் சொதப்பினர்.
நழுவிப் போன கேட்ச்கள்
இந்தியா 170 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து பந்து வீசியது. இந்திய அணியின் பீல்டிங் கடந்த போட்டியைப் போலவே இந்த முறையும் மோசமாக அமைந்தது. இந்திய பீல்டர்கள் ஒரே ஓவரில் இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி அதிரடியாக ரன் குவித்தனர். சிம்மன்ஸ் 67, லீவிஸ் 40, பூரன் 38 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
தோல்வி பற்றி பேசிய கோலி
இந்த போட்டிக்குப் பின் பேசிய கோலி, தோல்விக்கு என்ன காரணம் என வரிசை கட்டி புலம்பினார். இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங் சொதப்பல்கள் பற்றி விமர்சித்தார் கோலி.
கடைசி நான்கு ஓவர்கள்
16 ஓவர்களில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என சிறப்பான நிலையில் இருந்த இந்திய அணி, கடைசி 4 ஓவர்களில் 40 - 45 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், 30 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி. இது குறித்து விமர்சித்தார் கோலி.
சிவம் துபே அரைசதம்
சிவம் துபே தான் இந்தியா 170 ரன்கள் குவிக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் கோலி. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்தியாவை விட ஆடுகளத்தை சிறப்பாக புரிந்து கொண்டார்கள் என்று பாராட்டினார்.
பீல்டிங் சொதப்பல்
ஒரே ஓவரில் இந்தியா இரண்டு கேட்ச்களை நழுவ விட்டதை பற்றி குறிப்பிட்ட கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தால் எப்படிப்பட்ட அழுத்தத்தில் இருந்திருக்கும் என கேள்வி எழுப்பினார்.
சிறப்பான கேட்ச்
வாஷிங்க்டன் சுந்தர், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் சொதப்பினாலும், கேப்டன் விராட் கோலி பவுண்டரி கோட்டுக்கு அருகே அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார். அது மட்டுமே இந்திய அணிக்கு பீல்டிங்கில் ஆறுதலாக அமைந்தது.
முக்கிய போட்டி
இரண்டு போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 1 - 1 என சம நிலையில் இருப்பதால், மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும். அதனால், மூன்றாவது போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.